search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem steel plant"

    சேலம் உருக்காலை நஷ்டமாவதற்கு தமிழக அரசே காரணம் என்று மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #SalemSteelplant
    சேலம்:

    இரும்பு மற்றும் எக்குத்துறை மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் சேலம் இரும்பாலையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் உருக்காலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் உருக்காலை லாபத்தில் இயங்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உருக்காலை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்த உருக்காலையில் தயாரிக்கப்படும் ஸ்டீல் உலகத்திலேயே மிக சிறந்த ஸ்டீலாக உள்ளது. உருக்காலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், லாபத்தில் இயங்கவும் அதன் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சில யோசனைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், இந்தாண்டே பெரிய அளவில் நஷ்டத்தை குறைக்க முடியும் என்றும், அடுத்த ஆண்டே லாபத்தில் இயக்க முடியும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

    இந்த உருக்காலைக்கு தமிழக அரசு மின்சாரத்தை அதிக விலைக்கு வினியோகம் செய்கிறது. இதனால் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மின்சார கட்டணம் அதிக செலவை ஏற்படுத்துகிறது. இரும்பாலை நஷ்டத்தில் இயங்க இதுவே காரணம். இந்த மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசிடம் பல முறை கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.


    இந்த மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசிடம் பல முறை கேட்கப்படும் என்பது அமைச்சகத்தின் கொள்கை முடிவாக உள்ளது. மின் செலவை குறைக்கும் வகையில் சேலம் இரும்பாலையில் சூரிய ஒளி மூலம் 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் போது 20 சதவீத செலவு குறையும்.

    புதிய முயற்சிகள் மூலம் 30 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளோம். உருக்காலையில் மொத்த உற்பத்தித்திறன் 3 லட்சத்து 64 ஆயிரம் டன். இதை அடைந்தாலே நஷ்டத்தை குறைக்கலாம். ஊழியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

    இன்னும் 4 காலாண்டுக்குள்(ஓராண்டுக்குள்) உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய காரணத்தினால் தான் உருக்காலையின் பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

    உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம் ஆகியோர் என்னை பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். உருக்காலையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    உருக்காலையை தனியார் மயமாக்குவது குறித்து அதன் செயல்பாடுகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும். உருக்காலையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு 0.1 சதவீத வட்டியில் ரூ.215 கோடி கடன் வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SalemSteelplant
    திருப்பதியில் தேங்கி கிடக்கும் பயன்பாட்டில் இல்லாத 35 டன் நாணயங்களை சேலம் ஆலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து அதை திருமலைக்கு வந்து உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளில் நாணயங்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து தேவஸ்தானம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் வரவு வைத்து வருகிறது. நாணயங்களை தேவஸ்தானம் விரும்பும் போது கணக்கிட்டு வருகிறது.

    தற்போது தேவஸ்தானத்திடம் பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள் 35 டன் நிலுவையில் உள்ளது. இவற்றை உருக்கி உலோகங்களாக மாற்றி விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி முதல் 25 பைசா மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களின் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது.

    ஆனால் தேவஸ்தானம் தன்னிடம் உள்ள நாணயங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அவை தேக்கமடைந்தன. நாணயங்களை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்று ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கடிதம் எழுதியது.

    அதற்கு ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் கேட்காமல் தனிப்பட்ட முறையில் எவ்வித விளக்கமும் அளிக்க முடியாது என்று பதிலளித்தது.

    மேலும் நிலுவையில் உள்ள நாணயங்களை சேலத்தில் உள்ள உருக்காலையில் உருக்கி உலோகங்களாக மாற்றி விற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியது. உடனே தேவஸ்தானம் சேலம் உருக்காலையை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தது.

    அதற்கு ஆலை நிர்வாகம் நாணயங்களை உலோகத்தின்படி (அலுமினியம், கப்ரோனிகல், ஸ்டீல், தாமிரம், பித்தளை) பிரித்து அளித்தால் மட்டுமே உருக்கி அளிக்க முடியும் என்றும், அதற்கான மதிப்பு பணமாக மாற்றி அளிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

    தேவஸ்தானம் ஏதாவது எந்திரம் செய்ய உருக்காலைக்கு ஆர்டர் அளித்திருந்தால் அதிலிருந்து கழித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது. இதற்கு தேவஸ்தானமும் ஒப்புதல் அளித்துள்ளது.

    நாணயங்களை மாற்றிக் கொள்ள தேவையான காலக்கெடு இருந்தபோதும் தேவஸ்தான அதிகாரிகள் அவற்றை மாற்றிக் கொள்ளவில்லை.

    நாணயங்களை உருக்கினால் கிடைக்கும் மதிப்பை விட அவற்றை மாற்றியிருந்தால் அதிக தொகை கிடைத்திருக்கும். அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இனியாவது பயன்பாட்டில் உள்ள நாணயங்களை தேக்காமல் உடனுக்குடன் கணக்கிட்டு வங்கியில் வரவு வைக்க வேண்டும் என்று தேவஸ்தானத்திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    ×