search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road acident"

    • பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
    • சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளினாலும், வாகனங்களில் நிறுத்தி விற்பனை செய்யும் உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள்,போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர சட்டம்,ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்,மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா விஜயன் , துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கார் கட்டுப்பாட்டை இழந்து செனாப் பகுதியில் கவிழ்ந்ததில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
    • விபத்து குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறைந்தது ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

    இவர்களை மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் பாரத் பூஷன் தெரிவித்தார்.

    இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கார் கட்டுப்பாட்டை இழந்து செனாப் பகுதியில் கவிழ்ந்ததில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

    இவர்களை இந்திய ராணுவமும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்து குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தோடா மற்றும் சம்பாவில் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது" என்றார்.

    ×