search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Case Convicts"

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கூடாது என ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களை விடுவிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.



    இந்நிலையில் ராஜீவ் கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தனர். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது என கூறியிருந்தனர்.

    இதன்மூலம் 7 பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது. #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது. #RajivCaseConvicts #TNRajBhavan
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஜனாதிபதி தங்களது கருணை மனுவை தாமதமாக பரிசீலனை செய்ததை காரணம் காண்பித்து அவர்கள் விடுதலை கோரி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு 7 பேர் விடுதலையில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை” செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி அவர் அனுப்பி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. நடத்தியதால் கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.



    என்றாலும் தமிழக அரசு தனது நிலையில் இருந்து இறங்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்ய அதிகாரம் இருப்பதாக தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு அளித்த சுப்ரீம்கோர்ட்டு, “7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்” என்று அறிவித்தது.

    இதையடுத்து தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் அந்த பரிந்துரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதற்கிடையே நேற்று இந்த விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல் ஒன்று வெளியானது. 7 பேரை விடுதலை செய்ய கோரும் அமைச்சரவை பரிந்துரையை மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

    மத்திய உள்துறை அதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது. எனவே 7 பேர் விடுதலையில் புதிய சிக்கல்கள் எழுந்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த பரபரப்பு தகவலை இன்று (சனிக்கிழமை) கவர்னர் மாளிகை மறுத்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை இணை இயக்குனர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு கவர்னர் மாளிகை சார்பில் எந்த ஒரு குறிப்பும் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கு மிகவும் முரண்பாடான ஒன்று. இதில் சட்ட ஆய்வு, நிர்வாக ஆய்வு, அரசியல் சாசன ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன.

    இது தொடர்பான ஆவணங்கள், அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசின் பரிந்துரை அனைத்தும் நேற்றுதான் (14.9.2018) கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளன. இந்த பரிந்துரை மீதான ஆய்வை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.

    இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் உள்பட அனைத்து ஆலோசனைகளும் தேவைக்கேற்ப பெறப்படும். அதன் அடிப்படையில் சட்டப்படி பாரபட்சமின்றி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழக அரசின் பரிந்துரை தற்போது கவர்னர் பன்வாரிலாலின் ஆலோசனையில் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் மத்திய உள்துறைக்கு அதை அனுப்புவாரா? அல்லது சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி தாமாகவே முடிவை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #RajivCaseConvicts #TNRajBhavan
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விஷயத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். #MinisterJayakumar #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது கவர்னர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.



    இந்நிலையில் கவர்னர் முடிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்றார். தமிழர்களின் எதிர்பார்ப்பை கவர்னர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

    ‘இலங்கை போரின்போது திமுக ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம். நேரத்திற்கு ஏற்றாற்போல் திமுக நிறம் மாறும். திமுகவை வரலாறு மன்னிக்காது’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar #RajivCaseConvicts

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார். #BanwarilalPurohith #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன் என்று முருகன் தாயார் கூறினார். #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    இது தொடர்பாக முருகனின் தாயார் சோமணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    வேலூர் சிறையில் உள்ள முருகனையும், நளினியையும் சந்தித்து பேசினேன். அதன் பின்னரே முருகன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து அறிந்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆனால் இதற்கு முன்பு பல முறை விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்து மனவேதனை அடைந்தேன். சிறையிலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர். கடந்த ஆண்டு பிரதமர், தமிழக முதல்வருக்கு கருணை மனு அளித்தேன்.

    மனு பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. ஆனால் முதல்வரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

    தற்போது வந்துள்ள தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் மனு அளிக்க உள்ளேன். சோனியாகாந்தியையும் சந்திக்க விரும்புகிறேன்.

    நளினி, முருகனுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளதால் இங்கேயே வாழ விரும்புகிறோம். அவர்களின் விடுதலைக்கு பிறகு 108 வீடுகளில் பிச்சை எடுத்து கடவுளுக்கு நேர்த்தி கடனை நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivCaseConvicts
    ×