search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "probe panel"

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.



    இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #JayalalithaaDeath #ApolloHospital  #tamilnews 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தகவல்களோ, காவல்துறை அத்துமீறல் குறித்த தகவல்களோ இருந்தால் ஜூன் 22-ம் தேதிக்குள் தரலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22-ந்தேதி நடை பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க உள்ளது.

    காவல் துறை தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

    இதுபற்றி நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உள்ளவர்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் விசாரணை ஆணையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்பட உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி செல்கிறேன்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட உள்ளேன்.

    மறுநாள் (5-ந்தேதி) துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

    விசாரணை ஆணையம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் செயல்படும். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×