search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priest murder"

    சேலத்தில் கோவில் பூசாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டி, வலசையூர் காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சுந்தர்ராஜன் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். பிரியா திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    பாஸ்கர் நெசவு தொழில் செய்து வந்தார். மேலும் இவர் வீட்டின் எதிரே சிறிய காளியம்மன் கோவில் ஒன்றை கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி சென்ற பாஸ்கர் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.

    இதனால் அவரது மனைவி பத்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் பாஸ்கரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் வீட்டின் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் அருகில் இருக்கும் காலி இடத்தில் பாஸ்கர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கழுத்து பகுதியில் சுமார் 4 சென்டி மீட்டர் அளவுக்கு அறுக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீராணம் போலீசாருக்கும், அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.

    உடனே பத்மா மற்றும் அவரது உறவினர்களும், வீராணம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் பாஸ்கரை கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    அங்கு கொலையுண்டு கிடந்த தனது கணவர் உடலை பார்த்து பத்மா கதறி அழுதார். இதனை தொடர்ந்து போலீசார் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தபோது பாஸ்கருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, நல்ல மனிதர் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பத்மா மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பாஸ்கர் வெளியே போயி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். எங்கே போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. எனவே இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றனர்.

    மேலும் போலீசார் விசாரிக்கையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    சுந்தர்ராஜன் காலனியில் பாஸ்கர் மற்றும் அப்பகுதி மக்கள் எல்லோரும் சேர்ந்து காளியம்மன் கோவிலை கட்டியுள்ளனர். பின்னர் நாளடைவில் பொதுமக்கள் கோவில் நிர்வாக பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    மேலும் பாஸ்கர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தார். சீட்டு ஒரு மாதம் உறுப்பினர்களால் கட்ட முடியவில்லை என்றாலும் அவர்களிடம் பணத்தை கொடுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார். மறுமாதம் அந்த பணத்தை சேர்த்து வாங்குவார்.

    இந்த சீட்டில் வரும் லாபத்தை கொண்டு, கோவிலில் திருவிழாவும் நடத்தி வந்தார். இது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பொதுமக்களிடம் பணம் பிரித்து கோவில் கட்டியதால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சீட்டு பணம் கட்டுவதில் பெண்களிடம் பேசுவார். இது தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி பாஸ்கர் சம்பவத்தன்று இரவு எதற்காக வெளியே சென்றார்? அவரை வெளியே வருமாறு அழைத்தவர்கள் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    வண்ணாரப்பேட்டையில் தூங்கி கொண்டிருந்த பூசாரி மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, பிரிவில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 32). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் பூசாரியாக இருந்தார். ஆட்டோ ஓட்டி வந்த இவர் சிவசேனா கட்சியிலும் இருந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு கார்த்திக் ராஜா காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக்கல் போடப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சத்யா பார்த்த போது கணவர் கார்த்திக் ராஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.

    இதற்கிடையே கொலையுண்ட கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தகறை படிந்த கத்தியுடன் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அப்போது வீட்டு முன்பு தூங்கிய உறவினர் கார்த்திக் ராஜாவை கத்தியால் குத்தியும் தலையில் அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கார்த்திக் ராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஏழுமலை போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கார்த்திக் ராஜாவிடம் கூறினேன்.

    அப்போது அவர் எனது மனைவி குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக நேற்று இரவும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. எனவே கார்த்திக் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நான் அங்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் ராஜாவின் மார்பிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    உடனே அருகில் கிடந்த அம்மிக்கல்லை கார்த்திக் ராஜாவின் தலையில் போட்டேன். இதில் அவர் இறந்து போனார். பின்னர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஏழுமலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் அம்மில்லை போட்டு பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×