search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postpartum depression"

    • பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் மாற்றங்கள் வருவதுண்டு.
    • சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் 'பேபி ப்ளூஸ்' என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம். இன்னும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை 'பெரி பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம்.

    பிரசவத்துக்குப் பிறகான 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு'க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

     மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார்.

    ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது.

    முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத்தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

     போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள்.

    பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுகுறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

    • பேபி ப்ளூஸ் எனும் மனநிலை மாற்றங்களில் அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்
    • 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது

    பிரசவகாலம் என்பது பெண்களின் வாழ்வின் முக்கியமான பருவம். பிரசவத்திற்கு பிறகு தாயான சந்தோஷ உணர்வும், பிறந்த குழந்தையை குறித்த எண்ணங்களுமே தாய்மார்களின் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும்.

    ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு "பேபி ப்ளூஸ்" (baby blues) எனப்படும் சில மன அழுத்த அறிகுறிகள் தோன்றுகின்றன. இதில் மனநிலை மாற்றங்கள், அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்.

    பொதுவாக இந்த அறிகுறிகள் பிரசவத்திற்குப் பிறகு முதல் 2 முதல் 3 நாட்களுக்குள் தொடங்கி 2 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

    ஆனால் சில பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வு, நீண்டகால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அரிதாக ஒரு சிலருக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனநோய் எனப்படும் தீவிர மனநிலைக் கோளாறாக இது மாறலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை அமெரிக்காவில், மகப்பேற்றுக்கு பிறகான இந்த மனச்சோர்வுக்கான சிகிச்சை, நரம்புவழி ஊசி வடிவில் மட்டுமே கிடைத்து வருகிறது.

    ப்ரெக்ஸனலோன் (Brexanolone) எனப்படும் இந்த ஊசி வடிவிலான சிகிச்சையை பெற தாய்மார்கள், மருத்துவமனையில் தங்க வேண்டும். இதற்கான சிகிச்சை காலம் 60 மணி நேரம் ஆகும். இதற்கான செலவு, ரூ.28 லட்சம் ($34,000) வரை ஆகும்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் பகுதியை சேர்ந்த பயோஜென் அண்ட் ஸேஜ் தெராப்யூடிக்ஸ் நிறுவனம், ஜுர்ஜுவே (Zurzuvae) என பெயரிட்டு முதல்முதலாக ஒரு மாத்திரை வடிவிலான தீர்வை, இந்நோய்க்கு கண்டுபிடித்திருக்கிறது.

    இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூடிய விரைவில் இது சந்தைக்கு விற்பனைக்கு வரும்.

    ஒரு நாளைக்கு ஒன்று என 14 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டிய இந்த மாத்திரைக்கான விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

    ஊசி வடிவில் கிடைத்த சிகிச்சையால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் என்பதால் பல தாய்மார்களுக்கு இந்த செய்தி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    ×