search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pitrusapam"

    • முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம்.
    • இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும்.

    * நம் குடும்பத்தில் நம்முடன் வாழ்ந்து அல்லது நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் இது. மஹாளய பட்சத்தில் வரக்கூடிய துவாதசி திதி அன்று இதனை செய்ய வேண்டும். அன்று செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். இதற்கு 'ஸன்யஸ்த மகாளயம்' என்று பெயர்.

    * கணவனும், மகனும் இல்லாத பெண், தன் கணவர், மாமனார், மாமியார் மற்றும் முன்னோர்களுக்காக மகாளய அமாவாசை அன்று சங்கல்ப சிரார்த்தம் செய்யலாம். இதற்கு 'விதவா மகாளயம்' என்று பெயர்.

    * சுமங்கலியாக வாழ்ந்து இறந்த பெண்களுக்காக (பாட்டி, சகோதரி, தாய், அத்தை, சித்தி), மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி அன்று திதி செய்ய வேண்டும். இதற்கு 'அவிதவா நவமி' என்று பெயர். இதை முறையாக செய்யும்பொழுது அந்த குடும்பத்தில் பெண் சாபங்கள் விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும். வரும் காலங்களில் அந்த குடும்பத்தில் பெண்கள் விதவையாகும் நிலை உருவாகாது. இந்த நாளில் தங்களால் இயன்றவர்கள், சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரச் சொல்லி புடவை, ரவிக்கை, குண்டு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து வணங்கலாம்.

    * நம் குடும்பம் சம்பந்தப்பட்ட யாராவது துர்மரணம் அடைந்திருந்தால், அதாவது தண்ணீரிலோ, நெருப்பிலோ அல்லது தூக்கு போட்டு, விபத்துகளில், கொடிய மிருகங்களில் தாக்குதலில் அல்லது மற்றவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில் வரும் சதுர்த்தசி திதியன்று சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம். இதனால் அந்த குடும்பத்தில் துர்மரணம் நிகழாது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும். இதற்கு `சஸ்திரஹத மகாளயம்' என்று பெயர்.

    * தர்ப்பணம் செய்வதில், 'தேவ தர்ப்பணம்' என்று ஒன்று உள்ளது. சுண்டுவிரல் அடிப் பாகத்தால் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். தண்ணீர், அட்சதை (அரிசி) மட்டும் இதில் பயன்படுத்தப்படும். சிலர் எள் சேர்த்தும் செய்வர். இந்த தர்ப்பணத்தை, தாய் - தந்தை உயிருடன் உள்ளவர்கள் கூட செய்யலாம்.

    இந்த தர்ப்பணத்தைச் செய்யும்போது, கேசவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுசூதனம் தர்ப்பயாமி, த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ரிஷிகேசம் தர்ப்பயாமி, பத்மநாபனம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி, ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிரகஸ்பதி தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனீஸ்வரம் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி என்று சொல்ல வேண்டும்.

    • ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம்.
    • ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.

    முன்னோர்கள் இறந்த மாதம், பட்சம், திதி அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்சினை, துயர சம்பவங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.

    சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தால், ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த மகாளய பட்ச தர்ப்பணத்தை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.

    ஒரு முறை சத்தியலோகத்தில் உள்ள பிரம்மனை, சில தேவர்கள் சென்று தரிசித் தனர். அப்போது அவர்களிடம், "நீங்கள் என்னை பூஜை செய்யுங்கள்" என்றார். ஆனால் அந்த வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாத தேவர்கள், தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்டனர். இதைக் கண்ட பிரம்மா "ஏ மூடர்களே! நீங்கள் அறிவற்றவர்களாக போவீர்கள்" என்று சபித்தார். தங்கள் தவறை உணர்ந்து வருந்திய தேவர்கள், சாப விமோசனம் கேட்டனர். அதற்கு பிரம்மதேவன், "நீங்கள் என் மகன்களிடம் சென்று சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

    தேவர்கள் பிரம்மபுத்திரர்களிடம் சென்று வணங்க, அவர்கள் தேவர்களைப் பார்த்து, "புத்திரர்களே.." என அழைத்தனர். பின், "உங்கள் சாபம் விலகிவிட்டது. உங்கள் விருப்பம் போல் நீங்கள் சந்தோஷமாக செல்லுங்கள்" என்றனர். இதனைப் பார்த்த பிரம்மதேவன், "என் மகன்கள் உங்களை புத்திரர்களே என்று அழைத்தனர். நீங்கள்அவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றீர்கள். இன்று முதல் என் புத்திரர்கள் 'பித்ருக்கள்' (பித்ரு தேவதைகள்) என்று அழைக்கப்படுவார்கள். யார் இவர்களை பூஜிக்கின்றனரோ, அவர்களுக்கு பித்ரு தோஷம் விலகும்" என்றார். கவ்யவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வார்தன், பர்ஹிஷதன் ஆகிய ஏழு பேரும் பித்ரு தேவர்களாக இருக்கிறார்கள்.

    பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாக சிலர் சொல்வார்கள். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடியபோதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்காவிட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம்தான், 'பித்ரு சாபம்' ஆகும்.

    உயிருடன் இருக்கும் பொழுது தாய், தந்தையை பராமரிக்காத மகன், அவர்கள் இறந்த பிறகு வெகு சிறப்பாக சிரார்த்தம் செய்தாலும், அது காக்கை தின்னும் மலத்திற்கே சமம். இதை நன்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மகனால் கைவிடப்பட்ட தாய்-தந்தையரை, மகள் பராமரிக்கும் பட்சத்தில், அவர்கள் இறந்த பிறகு சிரார்த் தம் செய்த புண்ணியம் மகளையே சென்று சேரும்.

    ஒருவரின் தாய் -தந்தையர் அல்லது தாத்தா - பாட்டி இறந்த பிறகு, அவர்கள் நிச்சயம் வேறு ஜென்மம் எடுக்க வாய்ப்பு உண்டு என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அப்படி இருக்கையில் மீண்டும் பிறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் அப்படி நாம் அவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்குப் போய் சேருமா? அதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மறுபிறவி எடுத்தால் கூட, நாம் செய்யக்கூடிய எள் தர்ப்பண பலனை, பித்ரு தேவதைகள் ஏற்றுக்கொண்டு, நமக்கு புண்ணியத்தை தருகிறார்கள் என்பதுதான் உண்மை.

    யார், யாருக்கு..

    பொதுவாக 12 பேர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் முன்னோர்கள். அதன்படி

    1) பிதா - அப்பா

    2) பிதாமஹர் - பாட்டனார்

    3)பிரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்

    4) மாதா-அம்மா

    5) பிதாமஹி - பாட்டி

    6) பிரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்

    7) மாதாமஹர் - அம்மாவின் தகப்பனார்

    8) மாது: பிதாமஹர்- தாய்ப் பாட்டனாருக்குத் தகப்பனார்

    9) மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்

    10) மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)

    11) மாது: பிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குத் தாயார்

    12) மாது: பிரபிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி

    தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், யார் யாருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர், கோத்ரம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெயர் தெரியாவிட்டால், ஆண்களுக்கு 'நாராயணா' என்றும், பெண்களுக்கு 'லட்சுமி' என்றும் சொல்லும் வழக்கமும் உண்டு.

    மகாளய அமாவாசை தர்ப்பணத்தை, பசு கொட்டகை, பக்தர்கள் கூடக் கூடிய பொது இடங்கள், நதிக்கரை, சமுத்திரக்கரை, குளக்கரை, கோவில் மண்டபங்கள், புண்ணிய தலங்கள் ஆகியவற்றில் செய்வது விசேஷமானதாகும். சமுத்திரக்கரையில் செய்யும் பொழுது உப்பு நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    கயா சென்று சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது வரக்கூடிய பரணி நட்சத்திரம் அன்று (மகா பரணி என்று அழைப்பார்கள்) சிரார்த்தம் செய்தால், அஷ்டகயா ஷேத்திரங்களுக்கு சென்று, பல்குனி நதி, அட்சயவடம் போன்ற இடத்தில் பிண்ட பிரதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    ×