search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passes bill"

    சிறுமியர்களை பலவந்தப்படுத்தி திருமணம் செய்யும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. #PakistanSenate #18yearsgirls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் 12, 13 வயதான சிறுமிகளை பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பழக்கவழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை தடுப்பதற்காக பாகிஸ்தான் குழந்தை திருமணச் சட்டத்தில் மாற்றம்செய்யும் புதிய மசோதாவை பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. ஷெர்ரி ரஹ்மான் என்பவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    பெண்களின் பொதுவான பூப்பெய்தும் வயது மற்றும் திருமணத்துக்கான உடல்ரீதியான தகுதிக்குரிய வயதை 18 ஆக நிர்ணயிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.

    பெண்களின் பூப்பெய்தும் வயது அவரவர் உடல்கூறுகளுக்கேற்ப மாறுபடலாம். இதை நாம் ஒரு பொது வயதாக நிர்ணயம் செய்ய முடியாது என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கபூர் ஹைதரி என்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த மதவிவகாரங்கள் துறை மந்திரி நூருல் காத்ரி, இதைப்போன்ற ஒரு மசோதா கடந்த 2010-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டு, இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ‘பெண்கள் பருவமடையும் வயதை நாம் நிர்ணயிக்கக்கூடாது. அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரண்பாடானது’ என பல மாதங்களுக்கு பின்னர் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

    ஷெர்ரி ரஹ்மான்

    பின்னர், இந்த மசோதாவின் மீது விரிவாக பேசிய ஷெர்ரி ரஹ்மான், அல்ஜீரியாவில் பெண்களின் திருமண வயது 19 என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. வங்காளதேசம், எகிப்து, துருக்கி, மொராக்கோ, ஓமன், ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் 18 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

    வாக்குரிமை, தேசிய குடியுரிமை அட்டை போன்றவற்றை பெறுவதற்கு வயதுவரம்பு 18 ஆக இருக்கும் நிலையில் பெண்களின் திருமண வயதும் 18 ஆக மாற்றுவதில் தவறில்லை என்று வாதாடினார்.

    மேலும், நமது நாட்டில் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களில் 21 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதால் இங்கு இளம்வயது திருமணத்தால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழக்கும் அவலத்தை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.

    இந்த மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் 5 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

    இந்த சட்டத்தை மீறி சிறுமியரை திருமணம் செய்துகொண்டால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanSenate #18yearsgirls

    மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #ChitFundAct
    புதுடெல்லி:

    சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறவர்களை, நிதி மோசடியாளர்களை பிடித்து கடுமையான தண்டனையும், கடும் அபராதமும் விதிக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக கட்டுப்பாடற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்தது.

    இந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று சிறிய அளவில் விவாதம் நடந்தது.

    விவாதத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பேசினர்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, “மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திருப்பித்தரப்பட வேண்டும்” என கோரினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. முகமது சலீம் பேசும்போது, “ ஊழல் காரணமாகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் (அதிகாரத்துக்கு) வந்துள்ளது. அதன் சில உறுப்பினர்கள் சிறைக்கு போக வேண்டும்” என கூறினார்.

    அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

    முகமது சலீம் பேச்சு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    விவாதத்துக்கு நிதி மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உரிய அங்கீகாரமின்றி டெபாசிட்டுகளை பெற்றது தொடர்பாக 978 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 326 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

    இத்தகைய அங்கீகாரமற்ற டெபாசிட்டுகளை பெறுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்பி உடனே செயல்பட்டது. இந்த மசோதாவில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதி செய்தோம்.

    இந்த மசோதா, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்து, அவற்றை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க வகை செய்கிறது.

    சட்டத்தை தவறாக பயன்படுத்தாதபடிக்கு பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி மந்திரி பியூஸ் கோயலின் பதில் உரையைத் தொடர்ந்து மசோதா, குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.
    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. #Parliament #EconomicOffenders
    புதுடெல்லி:

    விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். தற்போதைய சட்டங்களில், அத்தகையவர்களின் சொத்துகளை பறிப்பதற்கான ஷரத்துகள் இல்லை. இதனால், வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

    ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதுடன், இந்தியாவில் சட்ட நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள மறுத்தால், அவர்கள் மீது தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    அவர்கள் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆஜராகாவிட்டால், அவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்படும். அதன்பிறகும் அவர்கள் வராவிட்டால், கோர்ட்டு மூலம் அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியும் நியமிக்கப்படுவார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு அந்த குற்றவாளி, உரிமை கொண்டாட முடியாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 19-ந் தேதி, இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பியவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம். அவர்கள் திரும்பி வந்துவிட்டால், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அவர்கள் வழக்கை சந்தித்து, தங்களை நிரபராதி என்று நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்.

    அவர்கள் கோர்ட்டை பயன்படுத்துவதற்கான உரிமையை மத்திய அரசு தடுக்காது. வெளிநாட்டுக்கு தப்புவதை தடுப்பதற்கும் மசோதாவில் வழி உள்ளது. விசாரணை அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படும். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட நடைமுறைகளும் இந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும்.

    குற்றவாளிகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்காக 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுடனும் தூதரக வழிமுறைகளை முழுமையாக பயன்படுத்தி, குற்றவாளிகளை மீட்க முயற்சிப்போம்.

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு தப்பியவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது சொத்துகளை காப்பாற்றி கொள்ளலாம் என்ற நிலை இனிமேல் இருக்காது.

    இவ்வாறு பியுஷ் கோயல் பேசினார்.

    பின்னர், இந்த மசோதா, மாநிலங்களையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால், இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிவிட்டது.   #Parliament #EconomicOffenders #tamilnews 
    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #LokSabha #PrakashJavadekar
    புதுடெல்லி:

    குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.



    அப்போது அவர் பேசியதாவது:-

    2009-ம் ஆண்டின், கல்வி உரிமை சட்டம், 8-ம் வகுப்புவரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவதை தடை செய்கிறது. அதில் திருத்தம் செய்வதற்காக இம்மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும்.

    அந்த மறுதேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளை ‘பெயில்’ ஆக்கி, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்மூலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    பின்னர், மசோதா மீது நடந்த விவாதத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மசோதாவை ஆதரித்து பேசினார். “எப்படி படித்தாலும் மேல்வகுப்புக்கு அனுப்புவதால், மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் குறைகிறது. அதே சமயத்தில், தொடக்க கல்வியானது, சமூக, உள்ளூர் கலாசார பின்னணியில் அமைய வேண்டும். எனவே, அதை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

    காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வை மத்திய அரசு நடத்துமா? மாநில அரசு நடத்துமா? என்பதில் தெளிவு இல்லை என்று கூறினார்.

    பார்த்ருஹரி மஹதாப் (பிஜு ஜனதாதளம்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பிரேம்சிங் சாந்துமஜ்ரா (அகாலிதளம்) ஆகியோரும் மசோதாவை ஆதரித்து பேசினர்.  #LokSabha #PrakashJavadekar #tamilnews 
    ×