search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parthenium"

    • ஒரு செடி 5000 விதைகளை காற்றின் மூலம் பரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது
    • 100 நாள் வேலை திட்டத்தில் இந்த செடிகளை அழிக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் எதிரியாக உருவெடுத்திருக்கும் பார்த்தீனியம் விஷசெடி அதிகமாக பரவி படர்ந்து இருப்பதாக சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

    இந்தியாவுக்கு கடந்த 1953-ம் ஆண்டு கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கோதுமையோடு வளர ஆரம்பித்தது. அதன்பிறகு படிப்படியாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு பரவியது.

    தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து வருகின்றன. இது எல்லா காலநிலையிலும் வளரும் தன்மை உடையது. ஒரு செடி 5000 விதைகளை காற்றின் மூலம் பரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் 42 மில்லியன் ஹெக்டர் பரப்பில் பார்த்தீனியம் செடிகள் தற்போது வளர துவங்கி உள்ளது. இதில் ஆட்ரோசின் நச்சு பொருள் உள்ளது. இது நிற்கும் இடத்தில் வேறு எந்த செடிகளையும் வளர விடாது.

    பார்த்தீனியம் செடிகளை ஆடு-மாடுகள் தின்றால், அவற்றின் பால் நஞ்சாகி மனிதர்களுக்கு தொற்று நோய்களை உருவாக்கும். காற்றின் மூலம் பரவுவதால் ஆஸ்துமா, அலர்ஜி, படர்தாமரை போன்ற வியாதிகளும் ஏற்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் பார்த்தீனிய விஷச்செடி வேகமாக விரவி படர்வது, விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலமும் கெட்டித்தன்மை அடைவதால், அங்கு உள்ள புழு பூச்சிகள் அழிந்து விடுகின்றன.

    கோத்தகிரி, கூக்கல்துறை, குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து நிற்கிறது.முது மலை வனவிலங்கு சரணா லயத்திலும் படர்ந்து நிற்ப தால் வனவிலங்குகளுக்கும் உணவு பற்றாகுறை ஏற்படுகிறது.

    பார்த்தீனியம் செடியை தீ வைத்து அழிக்கக் கூடாது. ஏனென்றால் அதன்மூலம் பரவும் புகை, மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தும். எனவே இந்த செடிகளை வேருடன் பிடுங்கி மக்க செய்து விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தலாம்.

    நீலகிரி மாவட்டத்தில் விரவிப்படரும் பார்த்தீனியம் விஷ செடிகளை ஒழிப்பதற்காக வேளாண்மை துறை மூலம் தனி நிதி ஒதுக்கி, அதன்மூலம் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த செடிகளை அழிக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும்
    • செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

    உடுமலை:

    பார்த்தீனியத்தை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

    பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனிய களைகளை சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ., நீளவாக்கில் சிறிதாக நறுக்கி 10 செ.மீ., சுற்றளவில் கீழிருந்து 5 செ.மீ., உயரத்தில் அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டு சாண கரைசலை கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். 5 நாட்கள் கழித்து 250 முதல் 300 மண் புழுக்களை மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும். பார்த்தீனிய மண்புழு உரத்தை தொழு உரமாக பயன்படுத்தலாம்.

    இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன. பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

    பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் இம்மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது என வேளாண்துறையினர் தெரிவித்தனர். 

    • கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று.
    • விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.

    உடுமலை :

    பார்த்தீனியம் களைச்செடியை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து, அவர் கூறியதாவது:- கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று. ஒருங்கிணைந்த களை மேலாண்மை வாயிலாக இதைக் கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இச்செடிகளின் அதிக வளர்ச்சி, பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுக்கும்.மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியத்தை அழிக்கும் என்பதால் அவற்றை பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.பூங்கா, தோட்டங்கள், புல் தரைகள் மற்றும் விவசாய நிலங்களில் பார்த்தீனியத்தை வேரோடு அகற்றுவது அவசியம். தொடர்ந்து பார்த்தீனியம் வளர்ந்தால், கட்டுப்படுத்த வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×