search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ops disqualified"

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. #OPPanneerselvam #TTVDhinakaran
    புதுடெல்லி:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின் தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. (நடராஜ் (மயிலாப்பூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), மனோகரன் (வாசுதேவநல்லூர்) ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் அவர்களை சேர்க்கவில்லை என தினகரன் தரப்பில் கூறப்படுகிறது)

    இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்செல்வன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்துசெய்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதுதொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே 10-ந் தேதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   #OPPanneerselvam #TTVDhinakaran #Tamilnews 
    ×