search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navaha Parayanam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான்.
    • `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும்.

    ராமாயணம் என்னும் ராமனின் வரலாற்றைச் சொல்லும் காவியத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த ராமாயணத்தை எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றியும், ராமாயணத்தின் சில அரிய தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

     உத்தர காண்டம்சொல்லும் செய்தி

    ராவண யுத்தம் முடிந்து ராமர் பட்டாபிஷேகத்துடன் யுத்த காண்டம் நிறைவுறும். நாட்டு மக்களின் பழிச்சொல்லைக் கேட்டு சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்புவது, லவ-குசர்கள் பிறப்பது, அவர்கள் வால்மீகியிடம் ராமாயணத்தை கற்றறிந்து அதை நாட்டில் உள்ள மக்களிடம் பரப்புவது, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்து, சீதாதேவி பூமியில் மறைவது, லவ-குசர்களுக்கு நாட்டை சரியாக பிரித்து வழங்கி விட்டு, சரயு நதியில் ராமர் தன் வாழ்வை முடிப்பது வரையான தகவல்களை உத்தரகாண்டம் தெரிவிக்கிறது.

    வால்மீகி ராமாயணமே பிரதானம்

    வேடனாக இருந்து (சிலர் கள்வர் என்பார்கள்) நாரதரின் அறிவுரையால், ராமபிரானை நினைத்து தவம் செய்து மகரிஷியாக மாறியவர், வால்மீகி. இவர்தான் ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான ராமாயணங்கள் இருப்பினும், அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான். இதிகாசங்களின் கீழ் வருகிறது, ராமாயணம்.

    `இதிகாசம்' என்பதற்கு `இது நடந்தது' என்பது பொருளாகும். எனவே உண்மையில் நடந்த ஒரு நிகழ்வையே வால்மீகி ராமாயணமாக வடித்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பர் இயற்றிய கம்பராமாயணம் முதல் போஜ ராமாயணம் வரை ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. என்றாலும் வால்மீகி எழுதிய ராமாயணத்தையே பிரதானமாக கொள்ள வேண்டும்.

    வால்மீகி எழுதாத உத்தர காண்டம்

    7 காண்டங்கள், 500 ஸர்க்கங்கள், 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்டதாக, ராமாயணத்தை வால்மீகி பாடியிருக்கிறார். காண்டங்கள் என்பது பிரிவுகளையும், ஸர்க்கங்கள் என்பது அந்தப் பிரிவுகளின் உட்பகுதிகளையும் குறிப்பிடுகிறது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்பது 7 காண்டங்களாகும்.

    இதில் உத்தர காண்டம் என்ற பகுதியை வால்மீகி மகரிஷி எழுதவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கம்பரும் கூட தான் எழுதிய ராமாயண காவியத்தில் பால கண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை பற்றிதான் பாடியிருக்கிறார். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் என்னும் பகுதியை, கம்பரின் சம காலத்தவரான ஒட்டக்கூத்தர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    நவாஹ பாராயணம்

    நவாஹ பாராயணம் செய்ய நினைப்பவர்கள் பால் காண்டம் தொடங்கி இறுதியில் ராம பட்டாபிஷேகம் சொல்லி முடிப்பார்கள். `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும். எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் : பாலகாண்டம் ஸர்க்கம் 1 முதல் 70-வது ஸர்க்கம் வரை

    இரண்டாம் நாள் : பால காண்டம் ஸர்க்கம் 71 முதல் அயோத்யா காண்டம் 64-வது ஸர்க்கம் வரை

    மூன்றாம் நாள் : அயோத்யா காண்டம் 65 ஸர்க்கம் முதல் 119-வது ஸர்கம் வரை

    நான்காம் நாள் : ஆரண்ய காண்டம் 1-ம் ஸர்க்கம் முதல் 68-வது ஸர்க்கம் வரை

    ஐந்தாம் நாள் : ஆரண்ய காண்டம் 69-ம் ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49-வது ஸர்க்கம் வரை

    ஆறாம் நாள் : கிஷ்கிந்தா காண்டம் 50-ம் ஸர்க்கம் முதல் சுந்தர காண்டம் 57-வது ஸர்க்கம் வரை

    ஏழாம் நாள் : சுந்தர காண்டம் 58-ம் ஸர்க்கம் முதல் யுத்த காண்டம் 50-வது ஸர்க்கம் வரை

    எட்டாம் நாள் : யுத்தகாண்டம் 51-ம் ஸர்க்கம் முதல் 111-வது ஸர்க்கம் வரை

    ஒன்பதாம் நாள் : யுத்த காண்டம் 112-ம் ஸர்க்கம் முதல் 131-வது ஸர்க்கம் வரை

    ×