search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mylapore Kabaliswarar temple"

    • பங்குனி பெருவிழா இன்று முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது.
    • மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, லஸ் சந்திப்பு, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாறு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரீஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந்தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 3-ந்தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 4-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 30 மற்றும் ஏப்ரல் 3, 4-ந்தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபாலீசுவரர் கோவிலிருந்து ஸ்ரீசைலம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை நிகழ்ச்சி நடந்தது.
    • திருத்தணி கோவில்களிலிருந்து திருப்பதி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை கொண்டு சென்று வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலில் வஸ்திர மரியாதை செய்துவிட்டு சாமி தரிசனம் முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில்களிலிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரசாமி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களிலிருந்து இதர மாநிலத் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இருந்து கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரா ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து கர்நாடகம், மைசூரு சாமுண்டிஸ்வரி அம்மன் கோலிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேசுவரர் கோவிலுக்கும், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து உத்தரபிரதேசம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து உத்தரகாண்ட் கேதர்நாத் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கும், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் இருந்து குஜராத் சோம்நாத் சோமநாத சாமி கோவில். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இருந்து, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கும், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து கர்நாடகம், மங்களூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலில் இருந்து கர்நாடகம் மாநிலம் செலுவ நாராயணப் பெருமாள் கோவிலுக்கும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் இருந்து அகோபிலம் நரசிம்மர் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்குவது தொடர்பாக கோவில் பழக்க வழக்கத்தினை கருத்தில் கொண்டும் மற்றும் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களை கலந்தலோசித்தும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விபரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதில் முதல்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் சந்திரமோகன், கூடுதல் கமிஷனர்கள் இரா.கண்ணன் மற்றும் திருமகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் காவேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×