search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moola thiruvizha"

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செடல் குத்தி ஊர்வலமாக சென்றனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசிமாதம் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மனுக்கும், அதை தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலின் உள்ளே உள்ள ஆழத்து விநாயகருக்கும் உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் கடந்த 22-ந்தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் செடல் குத்தி பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், செடல் குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    ஊர்வலம் கோவிலை வந்தடைந்த பின்னர், செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் விருத்தாசலம் பூக்கடை வியாபாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

    செல்லியம்மனுக்கு திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று ஆழத்து விநாயகருக்கு திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காலை 9.30 மணியில் இருந்து 11 மணிக்குள் அங்குள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், வருகிற 7-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து 10-ந் தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 15-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக விழாவும், 18-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மேளதாளம் முழங்க பூப்பல்லக்கில் தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்துக்கு திரும்பினார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. இந்த விழாவில் பாண்டிய மன்னராக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்க மதுரைக்கு சென்றார். அங்கு நேற்று மாலை 5 மணி வரை சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு திரும்பினார். அப்போது மழைபெய்தது. மழையை பொருட்படுத்தாமல் சாமிக்கு நெடுகிலும் திருக்கண் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். மழையோடு முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

    விழாவின் 8-ம் நாளான நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    நரியை பரியாக்கிய லீலை புராண தகவல் வருமாறு:-

    அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் மாணிக்கவாசகர் அமைச்சராக பணியாற்றி வந்தார். மன்னன் தனது படைக்கு தேவையான குதிரைகள் வாங்குவதற்காக மாணிக்கவாசகரை பெரும்பொருளுடன் அனுப்பி வைத்தான்.

    திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என மன்னர் கொடுத்த முழுப்பொருளையும் செலவிட்டார்.



    இதற்கிடையில் அரசனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாமல் திகைத்துப் போய் இறைவனை தொழுதார். இறைவனும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னரிடம் கூறும்படி அனுப்பி வைத்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்ட மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.

    மாணிக்கவாசகர் இது குறித்து இறைவனிடம் முறையிட்டார். அப்போது காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரை பாகர்களாக்கி, தானே தலைவனாக இறைவன் ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். இதைக் கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டினான். ஆனால் அன்று இரவு அந்த குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளை கொன்று விட்டு காட்டை நோக்கி ஓடின.

    இதை கண்ட மன்னன், மாணிக்கவாசகரை தண்டிக்க நினைத்து அவரை கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான். இறைவன், மாணிக்கவாசகரை காக்கும் பொருட்டு வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார்.

    இவ்வாறு புராணம் கூறுகிறது.



    நரியை பரியாக்கிய நேற்றைய லீலையின் தொடர்ச்சியாக, இன்று (வியாழக்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

    இதையொட்டி, காலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து சாமியும், அம்மனும் பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பு பகுதிக்கு செல்கிறார்கள்.

    அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து முடிந்து இரவு கோவில் வரும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. 7-ம் நாளான நேற்று வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் காலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆவணி மூலவீதி, மேலமாசிவீதி வழியாக இன்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதன் பின்னர் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினார்கள். அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரர் சாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது சாமிக்கு நவரத்தினகற்கள் பதித்த செங்கோல் வழங்கப்பட்டு, வைர கிரீடம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



    பின்பு சுவாமியின் பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று, 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் சாமியிடம் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் ஆட்சி நிறைவுபெற்று இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறுவதாக ஐதீகம்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் நடராஜன், கோவில் பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    ‘உலவாக்கோட்டை அருளிய லீலை’ புராணம் வருமாறு:-

    மதுரையில் அடியார்க்கு நல்லார் என்ற அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகு தான் உணவு உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். இதனால் அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பெற்றாவது தனது கடமையை நிறைவேற்றி வந்தார்.



    ஒரு கட்டத்தில் கடனும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனது மனைவியுடன் இறைவன் சோமசுந்தரரை தரிசனம் செய்த பின்பு உயிர் நீப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

    அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். இறைவன் தெரிவித்த படியே இருவரும் வீட்டிற்கு சென்றனர். அங்கு இறைவன் வழங்கிய உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்களுக்கு உணவளித்து வாழ்ந்தார். இவ்வாறு புராணம் கூறுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை‘ பற்றிய புராண தகவல் வருமாறு:-

    மதுரையில் வீரபாண்டியன் நீதியுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். அந்த சமயத்தில் ஒரு நாள், அரசன் வேட்டையாடச்சென்ற போது புலிக்கு இரையாகி இறந்தான். இதனை அறிந்த அரசனின் காமக்கிழத்தியர்களின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணி மகுடத்தையும் திருடிச்சென்றனர். இதனையடுத்து இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    மணிமகுடம் உள்ளிட்ட பொருட்கள் களவு போனதை இறைவனிடம் முறையிட எண்ணி கோவிலுக்கு சென்றனர். வழியில் இறைவன் சோமசுந்தரப்பெருமானே, நவரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றினார். அரண்மனையில் நடந்ததை அவர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் புதிய மணிமகுடம் செய்வதற்காக விலை உயர்ந்த நவமணிகளை அவர்களிடம் கொடுத்தார். மேலும் அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்பதையும் எடுத்துச்சொன்னார். புதிய மகுடத்தை சூட்டி இந்த குமாரனை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என கூறி மறைந்தார்.

    அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்பிச்சென்றனர். அதன்பின் திருடப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்றன. அபிடேகபாண்டியனுக்கு மகுடம் சூட்டப்பட்டது. செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான். மக்கள் நலமுடன் வாழ்ந்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பாண்டிய வேளாளர் தெரு, மேலமாசி வீதி, மேல, வடக்கு கீழ ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

    விழாவில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை திருவிளையாடலுக்கு, அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் லீலை பற்றிய விவரம் வருமாறு:-



    மதுரைக்கு தெற்கே ஒரு தடாகத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் நாரை மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்தில் முனிவர்கள் தினமும் வந்து நீராடினர். அப்போது அவர்கள் மீது குளத்தில் இருந்த மீன்கள் புரண்டு விளையாடின. முனிவர்கள் மீது புரண்டு விளையாடிய மீன்களை உண்ணக்கூடாது எனக்கருதி அந்த மீன்களை நாரை உண்ணாமல் இருந்தது. அப்போது முனிவர்கள் பேசியதை அறிந்த நாரை மதுரையை பற்றி தெரிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது. அங்கு குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்திப் பேறு பெற்றது.

    அப்போது அந்த நாரை இறைவனிடம், “பொற்றா மரைக்குளத்தில் இனிமேல் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்வாழ் உயிர்கள் இருந்தால் அவற்றை பறவைகள் உண்ணக்கூடும். இதனால் அந்த பறவைகளுக்கு பாவம் வந்துசேரும். எனவே பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக் கூடாது” என்று வரம் வாங்கியதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால் இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் இல்லை.

    ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவு சாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பூக்கடை தெரு, கீழமாரட் வீதி, அம்மன் சன்னதி வழியாக ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர்.
    ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஆண்டவனே “அடி” வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் ஆவணி மாதமாகும்.

    சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட திருநாளானது, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் சிறப்பாக பிட்டுக்கு மண்சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருப்பவர்கள், இந்த தினத்தில் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.

    மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நடத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது. 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான நேற்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை பின்வருமாறு:-

    ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

    இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு. விழாவில் நேற்று இரவு சாமி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 
    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது.

    4-வது நாளான 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் புறப்பட்டு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். 10-வது நாளான 20-ந் தேதி இரவு 1 மணிக்கு சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜ, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் மானூருக்கு புறப்பட்டு செல்கின்றனர். மறுநாள் 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மானூர் கோவிலை சென்றடைகின்றனர்.

    அங்கு காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க, புராண பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 20-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், காந்திமதி அம்பாள் பவனி அம்பாளாகவும் சப்பரத்தில் பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.

    21-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    ×