search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mettupalayam market"

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
    குன்னூர்:

    மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகிறது. மேற்கண்ட காய்கறிகள் நன்கு விளைந்து, அதிக மகசூல் தர நீர்பாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மலைக்காய்கறிகளில் கேரட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. குன்னூர் தாலுகாவில் கேத்தி பாலாடா, கொல்லிமலை, அதிகரட்டி, கோனானிமட்டம் போன்ற பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு உள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் மூட்டைகளாக லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி ஹரி கூறியதாவது:-

    கேரட் பயிரை பெரும்பாலான சிறு விவசாயிகள் பயிரிடுகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கேரட் சீசன் காலமாக உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடைத்தது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை மட்டுமே கிடைக்கிறது. ஒரு கிலோ கேரட்டுக்கு சாகுபடி செலவு, லாரி வாடகை, தொழிலாளர் கூலி ஆகியவற்றுக்கே ரூ.15 வரை செலவாகிறது.

    இதனால் தற்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாகவில்லை. மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தும் கேரட் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நீலகிரி கேரட் தேவை குறைந்து உள்ளது. இதே நிலை நீடித்தால், நீலகிரி கேரட் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெள்ளைப்பூண்டின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநில விவசாய விலை பொருள்களில் முக்கிய வியாபார கேந்திரமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்4 க்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு கமி‌ஷன் மண்டிகள் உள்ளன. வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நேற்று நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து சுமார் 15 ஆயிரம் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

    கடந்த வாரம் வெள்ளைப் பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.90 வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த வாரம் வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. கமி‌ஷன் மண்டிகளில் சுறுசுறுப்பாக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினார்கள். ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.20-ல் இருந்து ரூ.70 வரை விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.20 வரை குறைந்து விற்பனை ஆனது. பூண்டு விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வெள்ளைப்பூண்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வட மாநில வியாபாரிகள் யாரும் வராததால் இந்த விலை வீழ்ச்சி காணப்பட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வாரவாரம் வெள்ளைப்பூண்டு கொண்டு வருகிறோம். ஆனால் இந்த வாரம் பூண்டிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை. கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதே நிலை நீடித்தால் வெள்ளைப்பூண்டு விவசாயம் கேள்விக் குறியாகி விடும். எனவே வெள்ளைப் பூண்டு விவசாயத்தைப் பாதுகாக்க வெள்ளைப்பூண்டுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாங்கள் விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பவானி ஆற்றுப்பகுதியில் அதிகம் வாழைகளை பயிரிடப்படுகிறது. வாழைகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் பயிரிட்டிருந்த வாழைகள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான வாழை குலைகளை அறுவடை செய்ய முடியாமல் போனதால் வாழைகள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் வாழை நல்ல விளைச்சலை கண்டது. பெரும்பாலும் ஓணம் திருவிழாவிற்காக கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழைகள் அதிகம் பயிரிடப்பட்டிருந்தன. கேரளாவில் மழை காரணமாக ஓணம் ரத்து செய்யப்பட்டது.

    கேரளாவுக்கு என்றே பயிரிட்ட வாழைகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கம் அடைந்தது. சுற்றுப்புற பகுதிகளில் விளையும் வாழைகள் மேட்டுப்பாளையம் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் வாழை விலை மற்றும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த வருடம் இதே நேரத்தில் ஒரு கிலோ நேந்திரன் விலை ரூ.55 ஆக இருந்தது. தற்போது ரூ.32-க்கு மட்டுமே விற்பனையாகிறது.

    இதேபோன்று கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழை ஆகியவைகளின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது நேந்திரன் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.32 வரையும், கதளி ரூ.25-ல் இருந்து ரூ.55 வரையும், பூவன் (ஒரு தார்) ரூ.600 முதல் ரூ.900 வரையும், ரஸ்தாளி ரூ.200 முதல் ரூ.600 வரையும், செவ்வாழை ரூ.1000 முதல் ரூ.1200 வரையும், தேன் வாழை ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஏலம்போனது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கேரளாவுக்கு இந்த நேரத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தார்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 20 ஆயிரம் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது தவிர பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பகுதி வாழைகள் நாசமானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு ரூ.150 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1400 மற்றும் ரூ. 2100 வரை விற்பனை ஆனது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்ட விவசாய விளை பொருள்களின் முக்கிய வியாபார கேந்திரமாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகின்றது .

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன .நேற்று (19-ந் தேதி) மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு 7 லோடும், குஜராத்தில் குளிர்பதனக் கிடங்கில் இருந்து கொண்டு வரப்பட்ட கோலார் உருளைக்கிழங்கு 5 லோடும் வந்திருந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1400 மற்றும் ரூ. 2100 வரை விற்பனை ஆனது. அதே போல் குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.850-ல் இருந்து ரூ.1000 வரையும், கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1200 வரையும் விற்பனை ஆனது .உற்பத்தி குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்படுகின்றது .

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தினசரி உருளைக் கிழங்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன .


    ×