search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro trains"

    வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை விரைவில் இயக்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ்.வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூர சுரங்க வழித்தடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

    இந்த வழித்தடத்தில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, ஐகோர்ட்டு, வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் குறித்து ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் இறுதி கட்ட ஆய்வு நடத்துகிறார்.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு கமி‌ஷனர் ஒப்புதல் அளித்ததும் வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

    வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. நெருக்கடியான நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை ரெயில்கள் இயக்கப்படும். இதில் 45 கி.மீட்டர் தூரத்துக் கான வழித்தடப் பாதையில் ரெயில்கள் ஓடும். #MetroTrain
    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களை இணைப்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 55 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த பகுதிகளில் படிப்படியாக மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

    கடந்த மாதம் (மே) 24-ந் தேதி வரை, விமான நிலையம் - சின்னமலை இடையேயும், ஆலந்தூர்- நேரு பூங்கா இடையேயும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது தினமும் சராசரியாக 35 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் சின்னமலை - ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையேயும், நேருபூங்கா - சென்டிரல் இடையேயும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது விமான நிலையம் - ஏ.ஜி. டி.எம்.எஸ்., ஆலந்தூர் - சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுகிறது.

    மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, கடந்த 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நாட்களில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணித்து மகிழ்ந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதியுடன் இலவச பயணம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய தினமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மெட்ரோ ரெயில் சேவை கோயம்பேடு, விமான நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 30-ந் தேதி மெட்ரோ ரெயில்களில் 55,640 பேரும், 31-ந் தேதி 54,540 பேரும் பயணம் செய்துள்ளனர். முன்பு சராசரியாக பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால், தற்போது 20 ஆயிரம் பயணிகள் அதிகரித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. 
    ×