என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Meenakshi"

    • சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது.
    • மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார்.

    மாதந்தோறும் பவுர்ணமி தினம் வந்தாலும், சித்திரை மாதம் வரும் `சித்ரா பவுர்ணமி' தினத்துக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளது.

    சித்திரை மாதம் பவுர்ணமி திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் இந்த தினத்தை `சித்ரா பவுர்ணமி' என்று அழைக்கிறார்கள். மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் அன்று ஒன்றாகி இருக்கும்.

    அது மட்டுமின்றி சூரியபகவான் உச்சம் பெற்ற மேஷ ராசியில் இந்த பவுர்ணமி தினம் வரும். இதுவும் சித்ரா பவுர்ணமி தினத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    அம்மன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள், திருவிளக்கு பூஜை, பால்குடங்கள் எடுப்பது மற்றும் சித்திரை கஞ்சி தயாரிக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பது போன்றவற்றில் கலந்து கொள்ளலாம்.

    சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள், வீதி ஊர்வலங்கள் நடைபெறும். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார். அது போல காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாளை பிரம்மன் வழிபடுவார்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அதில் திருவண்ணாமலையில் நடைபெறும் `சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது. அது ஏன் என்பதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரது வாழ்விலும் அமாவாசை, பவுர்ணமி இரண்டு திதிகளும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி படைத்தவை.

    சூரியனுடன் 0 டிகிரியில் சந்திரன் இணைவது அமாவாசை ஆகிறது. பிறகு சந்திரன் தினமும் 12 டிகிரி வீதம் நகர்ந்து 15-வது நாளில் 180 டிகிரியில் சூரியனுக்கு சம சப்தமாகும் போது பவுர்ணமி ஆகிறது.

    பவுர்ணமியில் சந்திரன் முழுமையான ஆகர்ஷண சக்தியைப் பெற்று அருள் ஆற்றலை வெளிப்படுத்துவார். அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் கூடுதல் பலன்களைத் தரும்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்திரன் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகர்ஷ்ண சக்தியை வெளிப்படுத்துவார். அதாவது ஆண்டுக்கு ஒரு தடவையே இந்நாளில் சந்திரனிடம் இருந்து பல மடங்கு அளவுக்கு ஈர்ப்பு- சக்தி வெளிப்படும்.

    சந்திரன் வழங்கும் அந்த சக்தியை நாம் பெற வேண்டும். சந்திர ஒளி நம் உடல் மீது பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே சங்க காலத்தில் இருந்த நம் மூதாதையர்கள் சித்ரா பவுர்ணமியை மிக, மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

    வீடுகளில் யாரும் முடங்கிக் கிடக்கக்கூடாது. அன்றிரவு வெளியில் வந்து சந்திரன் தரும் சக்தியை பெற வேண்டும் என்று ஆலயங்களில் விதம், விதமாக விழாக்களை உருவாக்கினார்கள். இந்த அடிப்படையில் தான் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் மரபு உண்டானது.

    இந்த உண்மையை தெரிந்து கொண்டதால் தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். நாளை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் எந்த மாதம், எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஏற்கனவே நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்னர். ` சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?' என்று பலரும் யோசிக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வது என்றால், `நம் ஆத்ம பலம் அதிகரிக்கும்' என்ற மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்கும் `ஆத்ம பலம்' என்பது மிக, மிக முக்கியமானது. ஒருவரிடம் ஆத்ம பலம் பெருகினால் தான் அவர் இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

    ஆத்ம பலம் அதிகரித்தால் கடவுளைத் தேடும் ஞானமும், அறிவாற்றலும் அதிகரிக்கும். இதற்கு பின்னணியில் சூரியனும், சந்திரனும் உள்ளனர்.

    பித்ருகாரரான சூரியனும், மாத்ருகாரரான சந்திரனும் சிவசக்தியின் ஐக்கியமாக போற்றப்படுகிறார்கள். பிராணாயமம், யோகா போன்றவற்றில் சிறப்பு பெற சூரியனின் அனுக்கிரகமும், ஆத்ம பலம் மேம்பட சந்திரனின் அனுக்கிரகமும் அவசியம் தேவை.

    ஆத்ம பலம் மேம்பட்டால், மனம் வசப்படும். மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டால் வாழ்க்கை தடம் மாறி விடும். மனம் கட்டுப்பட, கட்டுப்பட நாம் யார், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பக்குவம் உண்டாகும்.

    பிறவிப் பெருங்கடலில் நீந்தி கரையேற வேண்டும் என்ற தாக்கத்தை இது தான் கொடுக்கும். முக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும்.

    இந்த பக்குவத்தை நாம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது பெற முடியும். இந்த பக்குவம் பெருக, பெருக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.

    பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தூய்மையான, நிம்மதியான வாழ்வை நாம் வாழ முடியும். தூய்மையும், நிம்மதியும் ஒருவருக்கு இருந்து விட்டால், அவர் எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும்.

    ஒரு மனிதனுக்கு இந்த பிறவியில் இதை விட வேறு என்ன வேண்டும். எனவே எல்லாம் தரும் ஆத்ம பலத்தைப் பெற சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோம். சிறப்பான வாழ்வை உறுதி செய்வோம்.

    • அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள்.
    • மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் தான்.

    சிவபெருமானை வழிபடுவது 'சைவம்', மகாவிஷ்ணுவை வழிபடுவது 'வைணவம்' என்று இருப்பதுபோல, அம்பாளை வழிபடும் சமயத்தை 'சாக்தம்' என்று அழைப்பார்கள். இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாக விளங்குவது, ஆதிபராசக்தியே என்ற கொள்கை அந்த வழிபாட்டிற்குரியது.

    அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


    மதுரை மீனாட்சி

    மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது.

    சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்ற இடம் மதுரை என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தின் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.


    சமயபுரம் மாரியம்மன்

    திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து 'சமயபுரம் மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.

    மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் 'பூச்சொரிதல்' விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.


    கன்னியாகுமரி பகவதிதேவி

    முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'குமரி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    பரசுராமர், பகவதி அம்மனின் திரு உருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரனை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.


    காஞ்சி காமாட்சி

    காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர் களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'காமகோடி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.


    பொள்ளாச்சி மாசாணியம்மன்

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வட கரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு 'மயானசயனி' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி 'மாசாணி' என்றானதாக சொல்கிறார்கள்.

    இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.

    ×