search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam students murder"

    கும்பகோணம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.

    பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் முன்தசீரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அந்த அழைப்பு எங்கிருந்து பேசப்பட்டது என்று செல்போன் டவரை வைத்து போலீசார் ஆய்வு செய்து முன்தசீரை தேடி வந்தனர்.


    இந்த நிலையில் இன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முன்தசீரின் உடலை பார்வையிட்டனர். கொலையாளிகள் பற்றிய தடயங்கள் கிடக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

    முன்தசீரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன்தசீரின் நண்பர்களிடமும் அவருக்கு யாரேனும் விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder

    ×