search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kruthi Year"

    • புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குரு மேஷ ராசியில் நிற்கிறார்.
    • கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.

    தமிழர்கள் சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் 38-வது தமிழ் ஆண்டான குரோதி வருடம் ஏப்ரல் 14, 2024 அன்று ஞாயிற்றுகிழமை, திருவாதிரை நட்சத்திரம், சஷ்டி திதியில் பிறக்க உள்ளது. குரோதி வருட கிரக சஞ்சாரங்கள்: (திருக்கணித பஞ்சாங்கப்படி)

    குரு:

    ஆண்டின் துவக்கத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் மே1, 2024 முதல் ரிஷப ராசிக்கு சென்று கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைப் பார்வையிடுகிறார்.

    சனி:

    வருட கிரகங்களில் அதிக வருடம் ஒரு ராசியில் பயணம் செய்யும் கிரகமான சனி பகவான் 29.3.2025 வரை கும்ப ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். மேஷம், சிம்மம், விருச்சிகத்தை பார்க்கிறார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் ரிஷபம், கன்னி, தனுசு ராசியை பார்வையிடுகிறார்.

    ராகு/கேது:

    வருடம் முழுவதும் மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.

    மேன்மையான பலன் பெறும் ராசிகள்

    மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் வருடம் பிறக்கும் போது சூரியன் தனது உச்ச வீடான மேஷத்தில் சஞ்சரிப்பார். ஆனால் இந்த குரோதி வருட புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குருவும் மேஷ ராசியில் நிற்கிறார். இது போன்ற கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.

    கால புருஷ 5ம் அதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியுமான சூரியனுடன் கால புருஷ 9-ம் அதிபதி பாக்கியாதிபதியுமான குரு சேருவதால் தர்மம் தலைத் தோங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்கள் புனரமைக்கப்படும். தொழில் முனைவோர் ஏற்றம் காண்பர்.

    தங்கம் விலையேறும், பங்கு சந்தை ஏற்றம் பெறும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்.செல்வச் செழிப்பை கூறும் கிரகம் சுக்ரன் உச்சம் பெறுகிறார். ஆடம்பரச் செலவு மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள், நகைகள், துணிமணிகள் மோகம் அதிகமாகும்.

    ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் மேல்நாட்டு பாணியில் சோஷியலாக பழகுவார்கள். வயது படுபாடு இல்லாமல் காதல் திருமணம் அதிகம் நடக்கும். சினிமா, நாடக , நடனக் கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.

    பெண்களின் தனித் திறமை உலகில் போற்றப்படும். கிரடிட் கார்டு கலாச்சாரம், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகும்.

    சனி+செவ்வாய் சேர்க்கை இருப்பதால் இயற்கை சீற்றம், அதிக மழை, விபத்துக்கள், போர் அபாயம், புதுவிதமான நோய், ஒற்றுமை குறைவு, அதீத வைத்தியச் செலவு, கடனால் அவதி, வழக்குகள் அதிகமாகும்.

    • இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம்.
    • மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும்.

    செவ்வாய் நீச்சமும், வக்ரமும்

    * ஐப்பசி 6-ந் தேதி முதல் தை 4-ந் தேதி (23.10.2024 - 17.1.2025) வரை கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகிறார்.

    * கார்த்திகை 18-ந் தேதி முதல் மாசி 9-ந் தேதி வரை (3.12.2024 - 21.2.2025) செவ்வாய் வக்ர நிலையில் இருக்கிறார்.

    * இடையில் தை 5-ந் தேதி (18.1.2025) அன்று மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், மீண்டும் பங்குனி 24-ந் தேதி (7.4.2025) அன்று கடகத்திற்கு திரும்பி வருகிறார்.

    இதுபோன்ற காலங்களில் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, செவ்வாய் ராசிநாதனாக அமைந்த மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள், அங்காரக தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.

    சனி, குரு வக்ர காலம்

    * குரோதி வருடம் ஆனி மாதம் 5-ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 18-ந் தேதி (19.6.2024 - 4.11.2024) வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார்.

    * குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29-ந் தேதி முதல் தை மாதம் 20-ந் தேதி (15.10.2024 - 11.2.2025) வரை, ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார்.

    இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'குரோதி'. வருகிற பங்குனி மாதம் 30-ந் தேதி (13.4.2024) சனிக்கிழமை அன்று, மிருகசீரிஷம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில், மிதுன ராசியில் இரவு 8.10 மணிக்கு மங்களகரமான குரோதி ஆண்டு பிறக்கிறது.

    இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த ஆண்டு சுக்ரனின் வீடான ரிஷப ராசிக்குச் செல்லும் குரு, அங்கு ஓராண்டு காலம் இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும், இனிய சம்பவங்களும் நடைபெறவும், மக்களுக்கு ஆன்மிக சிந்தனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம். நீர்நிலைகள் வற்றும் சூழலும், நெருப்பால் ஆபத்தும், புதிய தொற்று நோய்கள் உருவெடுத்தலும் இருக்கும். அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு, மக்களுக்கு மன கலக்கத்தை ஏற்படுத்தும்.

    புஞ்சைப் பயிர்களின் விளைச்சல் பெருகும். பவளம் மற்றும் சிவப்பு நிற ரத்தினங்களின் உற்பத்தி அதிகரிக்கும். தங்கம் விலை ஏற்றம் காணும். கால்நடைகள் விருத்தியாகும். எண்ணெய், மற்றும் திரவப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேவையான அளவு மழை பெய்து விவசாயத்தை காப்பாற்றும்.

    அரசியல் களம் சூடுபிடிக்கும். மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும். பெட்ரோல், டீசல், எரிவாயு இறங்குவதுபோல் தோன்றி, மீண்டும் ஏறுமுகம் காணும். வெள்ளை நிற பொருட்களின் விலை உயரும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கும். சுக்ரன் வீட்டில் குரு உலா வருவதால் நாடு முழுவதும் திடீர், திடீரென பதற்றம் அதிகரிக்கும். கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் மக்கள் மன அமைதி காணலாம். இளைஞர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய வருடம் இது. சனி - செவ்வாய் சேர்க்கை மற்றும் சனி -செவ்வாய் பார்வைக் காலங்களில், இயற்கை சீற்றங்களாலும், நூதன தொற்று நோய்களாலும் அச்சுறுத்தல் ஏற்படும். சித்திரை 18-ந் தேதி (1.5.2024) அன்று, குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. பகைக் கிரகமான சுக்ரன் வீட்டிற்கு குரு செல்வதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

    சனி - செவ்வாய் சேர்க்கை (14.4.2024 முதல் 21.4.2024 வரை), சனி- செவ்வாய் பார்வை (23.10.2024 முதல் 17.1.2025 வரை) காலங்களில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கடக ராசிக்கு அஷ்டமச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு பாதச்சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச்சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடக்கிறது. இவர்கள் சுய ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில், தசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைத் தரும்.

    ×