என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kripananda Wariyar Gurupuja"

    • 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் சிறப்புக்குரியவர்.
    • அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே இல்லை.

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் சிறப்புக்கு உரியவர். அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்த காலத்தில் இல்லை.

    தமிழகம் மட்டு மல்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் அருள் மணம் கமழும் ஆன்மிகத் தென்றலைத் தவழவிட்டவர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார். 3 வயதில் இருந்தே தம் தந்தையிடம் கல்வி பயின்றார். கல்வியுடன் புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்தார். 18 வயதிலேயே இறையருள் பெற்று தமது சொற்பொழிவுப் பணியைத் தொடங்கினார்.

    சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கும் வாரியார் சுவாமிகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, முருகப்பெருமானின் புகழைக்கூறும் சில படங்களிலும் நடித்தார்.

    "தேவைக்கு மேலே ஆசைப்படுவதுதான் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. வாரியார் சுவாமிகள் கடைசி வரை தனது தேவைக்கு மேல் எதையும் வைத்துக்கொண்டவர் இல்லை. எளிமையான, சிக்கன வாழ்வைத்தான் அவர் மேற்கொண்டார். ஒரு பென்சிலைக்கூட கடைசி வரை அவர் பயன்படுத்துவார். தன்னிடம் வந்த எல்லா சொத்துகளையும் பிறருக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர்.

    ஒருமுறை மேடையில் வாரியார் சுவாமிகள் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்து சிலர் எழுந்து செல்லத்தொடங்கி இருக்கின்றனர். அதைப் பார்த்துவிட்ட சுவாமிகள், தான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு இடைவேளை விட்டு, எனக்கு எதுக்காக `சொல்லின் செல்வர்' பட்டம் கொடுத்தாங்கன்னு, தெரியுமா? பட்டம் வாங்கும்போது புரியலை, இப்போ தெளிவா விளங்குது" என்று கூறியிருக்கிறார்.

    கூட்டம் திருதிருவென விழித்திருக்க சுவாமிகளே தொடர்ந்திருக்கிறார். `நான் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் புறப்படுகிறார்களே.

    `நான் சொல்லின், அவர் செல்வர்'. அதைக் குறிப்பிட்டுத்தானே எனக்கு அந்தப்பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என சுவாமிகள் சொன்னதும் கூட்டம் முழுவதிலும் சிரிப்பலை. நகைச்சுவையை தேவைப்படும் இடங்களில் மட்டும் நறுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர், வாரியார் சுவாமிகள்.

    1993-ம் ஆண்டு லண்டன் பயணம் முடித்து தமிழகம் திரும்பும்போது, விமானத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. ஆம். லண்டனிலிருந்து புறப்பட்ட வாரியார் சுவாமிகள், விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போதே தம்முடைய மூச்சை நிறுத்திக்கொண்டு, முருகப்பெருமானுடன் ஐக்கியமாகிவிட்டார்.

    சிந்தனை, சொல், செயல் என்று அனைத்தையும் முருகப்பெருமானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த வாரியார் சுவாமிகள் இன்று இல்லையென்றாலும், அவர் விட்டுச்சென்ற இலக்கியங்களும், பொன்மொழிகளும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன'. அவரது ஆன்மீக சொற்பொழிவு இறையருளை அளித்தது.

    காங்கயேநல்லூரில் குரு பூஜை

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு அவரது சொந்த ஊரான காட்பாடி காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே பிரம்மாண்டமாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை வாரியார் சுவாமிகளின் நினைவு நாள் என்றாலும் நட்சத்திரம் முறைப்படி இன்று அவரது நினைவு நாள் இங்கு அனுசரிக்கப்பட்டு குருபூஜை நடந்தது. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன.

    பல்வேறு கோவில்களில் உள்ள சாமியார்கள் வேத விற்பனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடந்தது. மூலவர் சன்னதியில் உள்ள சுவாமிகள் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மதியம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 7 மணிக்கு காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது. இதனையொட்டி கிருபானந்த வாரியாரின் பக்தர்கள் ஏராளமானோர் காங்கேயநல்லூரில் இன்று தரிசனம் செய்தனர்.

    ×