search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kochi boat accident"

    மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி, முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மீனவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்பிடி படகு மீது மோதிய கப்பல் மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று கூறப்படுகிறது. நேற்று மங்களாபுரம் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் கப்பல் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கப்பல் மோதி படகு உடைந்த விபத்தில் பலியான 3 மீனவ குடும்பத்தினருக்கும் அரசு ரூ.10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் வேலை வழங்க வேண்டும். இதுபோல காயமடைந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொச்சி கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற படகு மீது கப்பல் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சியில் முனபத் கடற்கரை உள்ளது. இங்கு இன்று காலை ஒரு படகில் 18 பேர் மீன்பிடிக்க சென்றனர். முனபத் கடற்கரையில் இருந்து 2 கி.மீட்டர் தூரம் கடலுக்குள் சென்றதும் அந்த வழியாக வேகமாக செல்லும் ஒரு கப்பல் வந்தது.

    எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கப்பல் மீன் பிடிக்க சென்ற படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படகில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து கொச்சி போலீசாருக்கு தெரியவந்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் தத்தளித்த 15 பேரை மீட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த 12 பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் 3 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை பல மணிநேரம் தேடியும் கிடைக்கவில்லை.

    பலியான 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. இது குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×