search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi commemoration"

    கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #Amitshah #NitinGadkari
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருச்சியில் கடந்த 17-ந்தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ் வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.

    அடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.


    பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

    தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.

    ஆனால் தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், “அமித்ஷா வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் உறுதி அளித்த பிறகே புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டது” என்றனர்.

    இதனால் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷா வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு அமித்ஷா வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    அவருக்குப்பதிலாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

    முதலில் தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்த அமித்ஷா, திடீரென புறக்கணித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொண்டால் அது கூட்டணி வி‌ஷயத்தில் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் அமித்ஷா இந்த கூட்டத்தை தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித்ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

    கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார். #Karunanidhi #Amitshah #NitinGadkari
    ×