என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal Collector"

    • மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை கலெக்டர் சோதிட்டார்.
    • பாதியில் படிப்பை நிறுத்திய 9-ம் வகுப்பு மாணவனிடம் கலெக்டர் குலோத்துங்கன் உருக்கமாக பேசி படிப்பை தொடர வலியுறுத்தியுள்ளார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், தொடர் நடவடிக்கையை கலெக்டர் குலோத்துங்கன் எடுத்து வருகிறார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தேனூரில் அமைந்துள்ள சண்முகம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, பள்ளிவளாகம், வகுப்பறைகள், கழிவறை, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இல்லாத காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருந்ததை அறிந்து,உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கழிவறை அடைப்பை சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

    மேலும், பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டிட பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்திடுமாறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை சோதிட்டார்.

    அப்போது, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் 100 சதவீத விழுக்காடு பெற்று இப்பள்ளியின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். இப்போது படித்தால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு சென்று நமது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றார்.

    இதை தொடர்ந்து, மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த கலெக்டர், 4 பேர் தொடர் விடுமுறையில் இருப்பதையும், 9-ம் வகுப்பு படித்த மாணவன், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எதிரே உள்ள ஒரு கடையில் பணி செய்வதாக மாணவர்கள் கூறியதை கேட்ட கலெக்டர், உடனடியாக அந்த மாணவனை அழைத்து, அவரிடம் உருக்கமாக பேசி, மீண்டும் பள்ளி படிப்பை தொடரவேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும் அங்கு இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம், அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வந்து தன்னை சந்திக்கும்படியும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் கல்வியாண்டில் 100சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும். இடைநிறுத்தல் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும் என்றார்.

    • உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.
    • மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் இதுவரை ஒருநாள் கலெக்டராகி, கலெக்டர் மணிகண்டனுடன் பணியாற்றியுள்ளனர். அந்த வரிசையில், காரைக்காலை அடுத்த நிரவி ஹுசைனியா அரசு உயர் நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி தஸ்னீம் அர்ஷியா என்ற மாணவி, காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால், பேச்சாற்றல், அறிவு திறன் போன்ற செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அம்மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் பல்வேறு பணிகளில் மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து செயல்பட்டார். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன், அனைத்து அதிகாரிகளிடமும் இம்மாணவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.

    அதற்கு மாணவி தஸ்னீம் அர்ஷியா பேசுகையில், ஒரு கலெக்டருக்கான அதிகாரம், செயல்பாடு இவை அனைத்தையும், இன்றைய நாள் கண்கூடாக கண்டேன். எதிர்கலத்தில் நானும் ஐ.ஏ.எஸ். மாவட்ட கலெக்டராகி மக்களுக்கு சிறப்பான பணியை செய்வேன். என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, மாணவியின் பெற்றோர் முகமது கியாசுதீன், நூருல் ஹையாத், பள்ளியின் முதல்வர் மற்றும் பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில் வளர்ச்சி, வனம், வனத்துறை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் முத்தம்மாவுக்கு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிமைப்பொருள் வழங்கல்துறை, பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா, மீன்வளத்துறை செயலராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் ஜெயந்த்குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, குடும்பநலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு வேளாண், கால்நடைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வக்புவாரியம், கலை, பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் கேசவனுக்கு பொது நிர்வாகம், நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, தீயணைப்பு, செய்தி விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், நகர மேம்பாடு, டி.ஆர்.டி.ஏ., வருவாய் சிறப்பு செயலர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார். சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்படி தலைமை செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.

    ×