search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K Sivan"

    ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.



    இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.

    இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.

    விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.

    இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan 
    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. #ISRO #KSivan
    ஸ்ரீஹரிகோட்டா :

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று செலுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளன. ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள், சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. பூமி ஆய்வுக்காக மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவிப்பரப்பின் மீது உள்ள பொருட்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்பது இந்த செயற்கைகோளின் முதன்மை நோக்கமாகும். இந்த செயற்கை கோள் விவசாய மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும்.

    தொடர்ந்து, பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.



    அதைத்தொடர்ந்து, 20 நாள்களில் ஜி.எஸ்.எல்.வி. ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.

    இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

    ‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்புவதற்கான பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    தொடர்ந்து அடுத்த ஆண்டு, 12 முதல் 14 செயற்கைகோள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி என்கிற சொத்தை இஸ்ரோ திறமையாக கையாண்டு தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) சேவையை நாட்டுக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #KSivan
    ×