search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jesus cross"

    என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம்.
    இறைவனிடம் 2 பேர் வணங்குகின்றனர். அதில் ஒருவர் நான் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஆதலால் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றார்.

    இரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    தான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.

    சமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே! கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.

    உடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.

    என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.

    - வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
    வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம்.
    இயேசுவை பற்றிய அறிவே இவ்வுலகச்செல்வங்களை விட மேலானது என்பது தூய பவுலடியாரின் ஆழமான நம்பிக்கை. இயேசுவை அறிதல் என்பது, அறிவு சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாது, அது அவரோடு இணைந்த அனுபவமாகவும் அமைய வேண்டும். அத்தகைய அனுபவத்தின் மூலமாகத்தான் துச்சமென அனைத்தையும் நாம் தூக்கி எறிய முடியும்.

    தூய பவுலடியார், இயேசு குறித்து கொண்டிருந்த அறிவு அனுபவப்பூர்வமானது. “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.ப. 9:5) என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தூய பவுலடியார் மனம் மாறினார். கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக பல்வேறு துன்பங்களை ஏற்றுக்கொண்டார். சிறையில் அடைத்த போதும், சாட்டையால் அடிக்கப்பட்ட போதும், கல்லெறியப்பட்டபோதும், கப்பல் சிதைவில் சிக்கிய போதும், சொந்த மக்களாலும், பிற மக்களாலும் இடர்களுக்கு ஆளானபோதும் அவர் மனந்தளரவில்லை. மாறாக, தாம் பெற்றிருந்த அழைப்பில் உறுதியாக நின்று, இயேசுவின் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்தார்.

    இயேசுவுடன் அவர் கொண்டிருந்த ஆழமான உறவு, இயேசுவின் தோழமையை, தாழ்ச்சியை, தன்னையே அர்ப்பணித்ததை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. ஆகவேதான், தான் பற்றிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் இழக்க முன் வருகிறார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள முயலும் போது ஏற்படும் எந்த இழப்பும், குப்பைக்கு சமமானதாக கருதினார் தூய பவுலடியார்.

    இந்த தவக்காலத்தில் உண்மையான செல்வமாகிய இயேசுவின் மீது நமது மனங்களை திருப்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நிலையற்றவைகளில் நமது பற்றினை களைந்து, நிலையானவற்றில் பற்று கொள்ள நம்மை தூண்டும் காலம் இது. புகழ், பதவி, பணம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் வரும் சிலுவைகளை சுமந்து கொண்டு, அவருக்கு உண்மையான சாட்சிகளாக வாழ முற்படுவோம்.

    இயேசுவோடு இணைந்திருந்து அவரின் உடனிருப்பை உணர்வோம். வாழ்வும், வழியும், உண்மையுமாகிய இயேசுவின் வழியில் நடக்கின்ற போது, எதிர்வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் மனஉறுதியோடு ஏற்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்தவக்காலம் நமக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

    அருட்பணி. தா.சகாயராஜ், பங்குத்தந்தை, மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல். 
    நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’.
    நீதி எனக்கு வேண்டாம்
    நீதியின் ஆண்டவர் வேண்டும்.
    நிலம் எனக்கு வேண்டாம்
    நிலத்தின் உரிமையாளர் வேண்டும்.
    இது தாவீது மன்னனின் வேட்கையாய் இருந்தது.

    நீதியின் ஆண்டவரும், நிலத்தின் உரிமையாளரும் கடவுளே என்பதை தாவீது அறிந்திருந்தார். கடவுள் தருவதில் அல்ல, கடவுளிடம் மட்டுமே மகிழ்ச்சியும், அமைதியும் உண்டு என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.

    ‘பிற தெய்வங்களின் பெயரைக் கூட நான் உச்சரிக்க மாட்டேன்’ என்கிறார் அவர். “அன்னிய தெய்வங்களின் பெயரை நீங்கள் சொல்லவேண்டாம்” எனும் கடவுளின் கட்டளையை அவர் பின்பற்றினார்.

    இறை பிரசன்னத்தில் வாழ்வதையும், இறை சித்தத்தை நிறைவேற்றுவதையுமே அவர் தனது வாழ்க்கையில் முதன்மையாய்க் கொண்டிருந்தார்.

    எல்லாவற்றையும் விட இறைவனே தனக்கு எல்லாம் என, இறைவனிடம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டுமெனில் நமக்கு இரண்டு அனுபவங்கள் தேவை.

    ஒன்று: இறை பிரசன்னம், இன்னொன்று: இறை சித்தம்.

    இறை பிரசன்னம் நம்மோடு இருக்கையில் நாம் இறை சித்தத்தை மட்டுமே செய்வோம்.

    இறை பிரசன்னம்

    ஏசாயா 6-ம் அதிகாரம் இறை பிரசன்னத்தின் அற்புதமான உதாரணம். அதை விடச்சிறந்த ஒரு பகுதியை நாம் பார்க்கவே முடியாது.

    ஏசாயா ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்கிறார். அப்போது இறை பிரசன்னத்தை உணர்கிறார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்ததும் தன்னுடைய நிலையை அவர் உணர்கிறார். தன்னுடைய நிலை உணர்ந்த உடனே தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறார்.

    பாவங்களை அறிக்கை செய்ததால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார். பாவ மன்னிப்பு கிடைத்ததும், கடவுளுடைய அழைப்பு தன்னுடைய செவிகளில் ஒலிப்பதைக் கேட்கிறார். கடவுளுடைய அழைப்பைக் கேட்டதும் தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறார்... என படிப்படியாக இறை பிரசன்னத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.

    “(இறைவன்) ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது” (1 திமோத்தேயு 6:16) என்கிறது பைபிள்.

    இறை பிரசன்னத்தை யாரும் காணமுடியாது எனும் நிலையை மாற்றியவர் இறைமகன் இயேசு. அவரது சிலுவை நமக்கு மீட்புக்காய் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு தரப்படாவிட்டால் நாம் கடவுளோடு நெருங்கியிருக்க முடியாது. காண முடியாத அவரை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம்.

    இறைவனின் பிரசன்னத்தை உணர்கிற உணர்வை நமக்கு சிலுவை பெற்றுத்தருகிறது. அதுவே மிகப்பெரிய பாக்கியம்.

    ஒருவராலும் அவரை நெருங்கவும் முடியாது என்கிறது விவிலியம். மோசேயிடம் “நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்கிறார் கடவுள்.

    அப்படிப்பட்ட கடவுள் இன்று நமக்குள் வசிக்கிறார். அதெப்படி சாத்தியமானது? இறைமகன் இயேசுவின் சிலுவை மரணமே அதை சாத்தியமாக்கியிருக்கிறது.

    இறை சித்தம்

    இறை சித்தத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைத் தேவை.

    “நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ ..” (தீத்து 2 :12 )என விவிலியம் பேசுகிறது.

    இறை சித்தம் நமது வாழ்க்கையில் நிகழ வேண்டுமெனில் நாம் தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டும். தீய நாட்டங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டுமெனில் பாவ இச்சையை வெறுக்க வேண்டும்.

    “உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்” (1 யோவான் 2:17) என்கிறது விவிலியம்.

    இறை சித்தத்தை நிறைவேற்றுவது விருப்பு,

    பாவ இச்சையை அகற்றுவது மறுப்பு.

    திருத்தூதர் பவுல் இறை பிரசன்னத்தை உணர்ந்தவர், இறை சித்தத்தை நிறைவேற்றியவர். பழைய ஏற்பாட்டில் தாவீதைப் போல, புதிய ஏற்பாட்டில் பவுல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

    பவுல் கிறிஸ்தவர்களைக் கொல்லத்தேடியவர். எப்போது அவருக்கு இறைவனின் பிரசன்னம் கிடைத்ததோ, அப்போது இறை சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்தார். பின்னர், தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து இறைவனோடு பயணித்தார்.

    தொடர்ந்து தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் இறைவனின் சித்தம் என எடுத்துக் கொண்டவர் அவர். திருச்சபையினரைச் சந்திக்கச் செல்வதையும், சந்தித்து திரும்பியதையும், நற்செய்தி அறிவித்தலுக்கு எழுந்த தடைகளையும் அதன்பின் நடந்த எல்லாவற்றையும் இறை சித்தம் என்கிறார்.

    பழைய ஏற்பாட்டில் தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றினார் என்பதை புதிய ஏற்பாடும் பதிவு செய்கிறது. ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்’ என தாவீது இறை சித்தத்தை நிறைவேற்றியதை திருத்தூதர் பணிகள் நூல் பேசுகிறது.

    நமது வாழ்க்கையில் நாம் மனதில் இருத்த வேண்டிய விஷயமும் இது தான்: ‘இறை பிரசன்னத்தை அறிந்து கொள்தலும், இறை சித்தத்தை செயல்படுத்துதலும் மிகவும் அவசியம் ஆகும்’. 
    இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
    “நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை” (சீராக் 6-15) என்பது மறைவாக்கு.

    ‘தம் நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ என்பது இயேசுவின் இறைவாக்கு.

    நல்ல நண்பர்களை தமதாக்கிக் கொண்டு, நட்புறவை பரிமாறி வாழ்கின்ற இனிமையான வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. இறைமகன் இயேசு ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ என்ற உவமையில் பிறரோடு நட்புறவு கொள்ளுவதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

    முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்

    செல்வந்தரான மனிதர் ஒருவருக்கு வீட்டுப்பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட தலைவர், “உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப்பொறுப்பாளராய் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார்.

    “வீட்டுப்பொறுப்பில் இருந்து தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே, மண் வெட்ட என்னால் இயலாது. இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறதே” என்று அவர் வருந்தினார். வீட்டுப்பொறுப்பிலிருந்து இன்னும் சில நாட்களில் அவர் நீக்கப்படப் போகின்றபடியினால், தலைவர் நீக்கிவிடும் போது பிறர் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்மதியோடு ஒரு செயலை செய்கின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை வரவழைக்கிறார். அவரிடம் கடனைக் கேட்கிறார். ‘நூறு குடம் எண்ணெய்’ என்பதை ‘ஐம்பது குடம் எண்ணெய்’ என்று எழுதச்சொல்கிறார். இன்னொருவர், ‘நூறு மூட்டை கோதுமை’ என்றவுடன் ‘எண்பது மூட்டை கோதுமை’ என்று எழுதச்சொல்கிறார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியைக் கண்டு, கடன்பெற்றவர்கள் அவரைப் பாராட்டினர்.

    ேநர்மறைப் பார்வையுடன் புரிவதற்கும் விளக்குவதற்கும் இந்த உவமை சற்று முரண்பாடுடன் காணப்படுகின்றது. இது மறைநூல் அறிஞர்களுக்கோ, மக்களுக்கோ கூறப்பட்டதில்லை. மாறாக, இயேசு தமது சீடர்களுக்கே கூறியதாகும்.

    நீதியற்ற ஒரு பணியாளன், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு தனக்கென்று நண்பர்களைத் தேடிக்கொள்ளுவதைப் பற்றிக் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர்

    பாலஸ்தீன நாட்டில் அநேக செல்வந்தர்கள் இருந்தார்கள். யூதர்கள் அனைவரும் செல்வந்தர்களைக் குறித்து நன்கு அறிந்திருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளை மேற்பார்வை செய்ய வீட்டுப்பொறுப்பாளர்களையும் நியமித்திருந்தனர். செல்வந்தர்கள் உடைமைகளை குறித்த அத்தனை விவரமும் அவர்களை விட வீட்டுப் பொறுப்பாளர்களுக்கே தெளிவாக தெரியும்.

    செல்வந்தர்களின் தொழில் செழிப்புறுவதும், நலிவடைவதும் இந்த வீட்டுப் பொறுப்பாளர்களின் கரத்தில் தான் உள்ளது. சொல் ஆளுமையும், அறிவும், திறமையும், முன்மதியும் நிறைந்த வீட்டுப்பொறுப்பாளர்கள் தான் செல்வந்தர்களின் பலம் ஆகும்.

    இங்கே குறிப்பிடப்படும் வீட்டுப்பொறுப்பாளர் ஒரு அடிமை தான். எனினும், தன் தலைவரின் உடைமைகளுக்கு பொறுப்பாளியும் இவர் தான். தன்னுடைய அதிகாரம், பொறுப்பு எடுபட்டுப் போகக்கூடிய ஒரு இக்கட்டான நிலைக்கு உட்படுகின்றார்.

    முன்மதியோடு செயல்படுதல்

    வீட்டுப்பொறுப்பாளர் இங்கே நீதியற்றவராய் முனைந்து செயல்படத் துணிகிறார். இவரைப் போல் கடனாளிகளும் அநீதியாளர்களாகவே மாறிப்போகின்றனர். தன்னுடையவற்றில் இருந்து வீட்டுப்பொறுப்பாளி கடன் கொடுக்கவில்லை என்றாலும், கடன் கணக்கு தன்னுடைய கையில் இருக்கும் வரை இதை மாற்றவோ திருத்தவோ அவரால் முடியும். ஏனெனில் கடன் பெற்றவர்கள் யார் யார் தன்னிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்பது தலைவருக்குத் தெரியாது.

    கடன் பெற்றவர்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தத்துடனேயே நிலத்தினை வாங்கியிருப்பார்கள். நிலத்திற்கூரிய கிரயத்தை பணமாக அல்லது பொருளாக செலுத்துவதே வழக்கம். இங்கும் பொருளாக செலுத்தவே உடன்பட்டிருக்கிறார்கள்.

    முதலாவது மனிதர் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டிருக் கிறார். நூறு குடம் எண்ணெய் ஏறக்குறைய 3,700 லிட்டருக்குச் சமம். இது ஒலிவ எண்ணெயாக இருக்கலாம்.

    இரண்டாவது கடன்காரர் கோதுமை கடன்பட்டவர். ஏறக்குறைய நூறு கலம். நூறு கலம் கோதுமையின் விலை ஏறக்குறைய நான்காயிரம் ரூபாய். இதை மாற்றி எண்பது கலம் என்று எழுதும்படி வீட்டுப்பொறுப்பாளர் கூறுகின்றார்.

    வீட்டுப்பொறுப்பாளர் தன் விருப்பப்படி ஒருவருக்கு சரிபாதி கடனையும், மற்றவருக்கு ஐந்தில் ஒரு பங்கு கடனையும் குறைக்கின்றார்.

    இங்கே இவரின் செயலும் அநீதி, பொருளும் அநீதி. ஆனால் நேர்மையற்ற உலகப்பொருள் மூலம் தனக்கு அடைக்கலம் தருகின்ற, நேசிக்கின்ற, தனக்கு நன்றியுணர்வு காட்டுகின்ற இரு நண்பர்களை உருவாக்குகின்றார். இந்த முன்மதியையே தலைவரும் பாராட்டுகின்றார்.

    நண்பர்களைத் தேடுவோம்

    பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர். இந்த செல்வத்தையும், நல்வாழ்வையும், மேன்மையையும் கொடுக்கிறவர் கடவுள் (சஉ. 6:2).

    நம் வாழ்வில் அருளப்படுகின்ற செல்வங்கள் நம் சுய நலனுக்கானதல்ல. இது பிறர் வாழ்வுக்காகவும் பகிரப்பட வேண்டியதே. நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான் (நீதி 17:17).

    சமயம், இனம், மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயத்துடன் எல்லாருடனும் நட்புறவு கொள்ள நம் உலகப் பொருள்கள் உதவிடட்டும். குருவான இயேசு தம் சீடர்களை ‘தோழர்களே’ என்று நட்புறவுடன் அழைத்தார். அவர்களை இறுதிமட்டும் நேசித்தார்.

    சில விரற்கடை அளவாயுள்ள ஆயுட்காலத்தை கொண்ட இம்மானிட பிறப்பில் பல பண்பில் உயர்ந்த நல்ல நண்பர்களை நமதாக்கி கொண்டு, இறைவழியில் நட்புறவு கமழும் நிறைவாழ்வு வாழ்வோம்.

    அருட்பணி. ம. பென்னியமின், உண்ணாமலைக்கடை. 
    எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.
    கோபம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அது வராமல் காக்க வேண்டும். மனிதனிடம் என்னென்ன குணங்கள் உண்டோ அவையெல்லாம் இயற்கையானவை. மனிதனுக்கு தேவை என்பதால் தான் இறைவன் அந்த குணங்களை படைத்திருக்கிறான். அந்த குணங்களுள் ஒன்று கோபம். கோபம் கொள்ளாத மனிதன் இருக்க முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. மனிதர்கள் கோபப் படுகிறார்கள் சரி. இயேசுவே விவிலியத்தில் கடுமையாக கோபத்தை வெளி படுத்துகிறார் (யோவான் 2:13-25). என் தந்தையின் இல்லத்தை, கோவிலை வணிக கூடாரமாக்காதீர்கள் என கோபம் கொண்டு அடித்து விரட்டுகிறார். ஆலயம் என்பது காசு பார்க்கும் இடமல்ல. அது இறைவேண்டலின் வீடு என்று சீறுகிறார். இது கோபத்தை தாண்டிய அறச்சீற்றம் என்கிறார்.

    ஒருவனுக்கு கோபமே வராது என்றால் அவனுக்கு எதுவுமே வராது. அன்பு கொண்ட மனம் தான் கோபம் கொள்ளும். கோபம் கொண்ட மனம் தான் அன்பு கொள்ளும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை தவிர்த்து அநியாயத்துக்கு எதிராகவே எப்பொழுதும் நின்று கண்முன் நடக்கும் அநீதியை கண்டு கோபமுற்ற இயேசுவின் அறச்சீற்றம் இத்தவக்காலத்தில் நமதாகட்டும்.

    - வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம். தேவனுடைய சாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் மூலமாக தேவனோடு இருந்த நெருங்கிய உறவை இழந்து பாவியானான். ஆபிரகாமின் மூலமாக வரக்கூடிய சந்ததியின் மூலமாக முழு உலகையும் தேவன் ரட்சிக்கவும், பரிசுத்தமுள்ள ஒரு சந்ததியை உருவாக்கவும் விரும்பினார். மனிதனிடம் பரிசுத்தமுள்ள வாழ்வை எதிர்பார்த்த தேவன் மோசேயின் மூலமாக சீனாய் மலையிலே வைத்து இஸ்ரவேலருக்கான நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.

    நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதமும், நியாயப்பிரமாணத்தை மீறினால் தண்டனையும், ஆக்கினை தீர்ப்பும் வரும் என்றும் மோசேயின் மூலம் கூறினார். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்தாலும் மாமிச பலவீனத்தினால் அநேகரால் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள இயலவில்லை.

    நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டாலும் ஒன்றிலே தவறினாலும் அவர்கள் குற்றவாளிகளாகவும், தேவனுடைய தண்டனைக்குரியவர்களாகவும் மாறினர். நியாயப்பிரமாணத்தைக் காத்து நடந்து தேவனைக் கிட்டிச் சேர வேண்டிய இஸ்ரவேலர்கள் நாளுக்கு நாள் பிரமாணங்களை மீறி தேவனுக்கு தூரமானார்கள். ஆனால் மாமிச பலவீனத்தினால் இஸ்ரவேலர் செய்ய முடியாததை கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி, தம் சொந்த மாமிசத்தினாலே தேவனையும் ,தூரமாயிருந்த தேவ ஜனங்களையும் ஒப்புரவாக்கினார்.

    எபே:2:13-16-ல் முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாமிசத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இரு திறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பைபிளில் கூறுவது போல சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ரத்தம் எல்லோருக்குமான மீட்கும் பொருளாக மாறி எல்லோரையும் தேவனோடுகூட ஒப்புரவாக்கியது. நாமும் அந்த மேன்மையான ரத்தினால் நம் பாவங்கள் கழுவ ஒப்புக்கொடுத்து நாமும் தேவனோடு ஒப்புரவாவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    - போதகர்.அமல்ராஜ்
    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.
    இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வர மோசேயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். மோசேயை அழைக்கும் போது, அவரிடம் ‘நான் உன் முற்பிதாக்களின் கடவுள்’ என அறிமுகம் செய்து கொள்கிறார்.

    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.

    கடவுளின் அழைப்பை ஏற்று முன் பின் பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் சென்றவர் ஆபிரகாம். அவருக்கும் இவர் கடவுள்.

    வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறாமல் போனவர் ஈசாக்கு. அவருக்கும் இவர் கடவுள்.

    மூத்தவனுக்கு வரவேண்டிய தந்தையின் ஆசியைத் தந்திரமாய் பறித்தவர் யாக்கோபு, அவருக்கும் இவர் கடவுள்.

    பணிந்து நடக்கும் நல்லவருக்கும், வரலாற்றில் சிறப்பிடம் பெறாமல் போகிறவனுக்கும், தந்திரக்காரனுக்கும் இவரே கடவுள்.

    மோசே கடவுளின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு எதிர்ப்புகளை அவர் தெரிவிக்கிறார்.

    முதலாவது, “நான் தகுதியற்றவன்” என்கிறார். நான் எம்மாத்திரம் என தன்னைப் பற்றி மோசே கூறுகிறார். கடவுளோ, “பயப் படாதே, நான் உன்னோடு இருப்பேன்” என அவருக்கு உறுதி கொடுக்கிறார். “நான் தகுதியற்றவன்” எனும் சிந்தனை நம்மை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் இறைவன் நம்மோடு இருக்கிறார் எனும் சிந்தனை நம்மை வலுவூட்டும் செய்தியாக மாறிவிடுகிறது.

    இரண்டாவது, எதிர்ப்பு, ‘கடவுளுடைய பெயர் என்ன?’ எனும் சிந்தனை. கடவுள் யார் என்பது எனக்கே தெரியாவிட்டால் நான் எப்படி அடுத்தவர்களுக்குச் சொல்ல முடியும்.

    எகிப்தில் வாழ்ந்தவர் தான் மோசே. அங்கே பல கடவுள்களை வணங்கிய பழக்கம் அவருக்குத் தெரியும். அதனால் தான் “கடவுளின் பெயர் என்ன?” என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார்.

    மூன்றாவது, ‘என்னை நம்புவார்களா?’ எனும் கேள்வி. நான் ஆண்டவரின் பணியை செய்யச் செல்லும் போது மக்கள் என்னை நம்பு வார்களா எனும் கேள்வி காலம் காலமாய் எழுகின்ற ஒரு கேள்வியே. இறைவன் செய்கின்ற வல்ல செயல்கள் மட்டுமே மக்களுக்கு சட்டென ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.

    பைபிளில் வருகின்ற, கிதியோனுடைய வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். “நான் வெட்ட வெளியில் ஒரு கம்பளி விரித்து வைக்கிறேன். நிலம் காய்ந்திருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால் உம்மை நம்புவேன்” என கடவுளிடம் சொல்கிறார் கிதியோன். அப்படியே நடக்கிறது.

    எனினும் நம்பிக்கை வரவில்லை, “நாளை கம்பளி மட்டும் காய்ந்து இருக்க வேண்டும் நிலம் ஈரமாய் இருக்கட்டும். அப்படி நடந்தால் உம்மை நம்புவேன்” என்கிறார். அப்படியே நடக்கிறது. இப்படிப்பட்ட வல்ல செயல்களே இறைவன் மீதான நம்பிக்கைகளை வளமையாக்குகின்றன.

    நான்காவது, ‘நான் திக்குவாயன்’ என்கிறார் மோசே. இது வெகு சகஜமாக இன்றும் நாம் கூறுகின்ற வார்த்தை. “எனக்கு பேச தெரியாதும்மா?”. நம்மையே நாம் குறைத்து மதிப்பிடுகின்ற செயல் தான் இது.

    இன்று சிலுவை நிழலில் நமக்குரிய சிந்தனை இந்த மறுப்புகளைத் தாண்டுகின்ற சிந்தனைகளால் அமைகிறது.

    1. பலவீனங்களைத் தாண்டிய பலம்.

    எப்போதெல்லாம் நான் எனும் எண்ணத்துடன் திரிகிறோமோ அப்போதெல்லாம் பலவீனராய் மாறிவிடுகிறோம். என்னை நம்புகிறார்களா? நம்மை நம்புவார்களா? என்பதெல்லாம் சுய பலத்தின் மீதான நம்பிக்கை. ‘நம்மை அனுப்பிய கடவுளை நம்புவார்களா?’ என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வி.

    ‘எனக்கு வலிமையில்லை, நான் சிறியவன், சமூகத்தில் முக்கியமற்றவன்’ என நாம் நினைக்கும் போதெல்லாம் நமக்கு சிலுவை பலம் தருகிறது. ‘பேசத் தெரியாது’ என சொன்ன மோசே தான் மாபெரும் விடுதலை வீரரானார். ‘பேசத்தெரியாத சிறுபிள்ளை நான்’ என்று சொன்ன எரேமியா தான் மாபெரும் தீர்க்கதரிசி ஆனார்.

    2. ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் பலம்

    இருவர் இணைந்து பணி செய்வதை இறைவன் அனுமதிக்கிறார். மோசேக்கு துணையாய் ஆரோனை அனுப்புகிறார். எலியாவுக்குத் துணையாக எலிசா இருக்கிறார். பின்னாளில் எலிசா மாபெரும் தீர்க்க தரிசியாய் மாறினார். நாமும் இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனிதர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

    3. அற்பமானவை ஆச்சரியமாய் மாறும் பலம்

    எதிரி மன்னனுக்கு முன்னால் நின்ற மோசே தண்ணீரை ரத்தமாய் மாற்றிக் காட்டினார். இது ஒரு அடையாளமாய் மாறியது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் அடையாளம்.

    தாவீது எனும் சின்னப் பையனின் கையில் இருந்த சாதாரண கூழாங்கற்கள் கோலியாத் எனும் மாவீரனைச் சாய்த்தது. கூழாங்கல் அடையாளம், இறைவன் அதை ஆச்சரியமாய் மாற்றுகிறார்.

    அன்று எகிப்தின் எல்லைக்கோட்டை இஸ்ரயேல் மக்கள் தாண்ட ரத்தமாய் மாறிய தண்ணீர் அடையாளமாய் அமைந்தது.

    இன்று பாவம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட, சிலுவையின் ரத்தம் நமக்கு மீட்பின் அடையாளமாய் இருக்கிறது. 
    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது.
    எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்களை மோசே எனும் தலைவர் மூலமாக இறைவன் மீட்டுக் கொண்டு வந்த கதை அனைவரும் அறிந்ததே. அங்கே மோசேயுடன் துணையாகச் சென்றவர் ஆரோன் என்பவர்.

    மோசேயிடம் கடவுள், ‘ஆரோன் உனக்கு வாய் போல இருப்பான், நீ அவனுக்குக் கடவுளாய் இருப்பாய்’ என்கிறார்.

    அவர்கள் பார்வோன் மன்னனிடம் செல்ல வேண்டும். இப்போது கடவுள் மோசேயிடம், “உன்னை பார்வோனுக்குக் கடவுளாக ஏற்படுத்துகிறேன்” என்கிறார். பார்வோனின் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார்.

    எகிப்தில் மாந்திரீக செயல்கள் அதிகம். அதுதான் மதம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு மாற்றுச் சிந்தனையாகத் தான் கடவுள் அங்கே ஆச்சரியங்களைச் செய்ய முடிவெடுக்கிறார்.

    மோசேயின் கையிலிருந்த கோல் ஒரு அடையாளமாய் இருந்தது. இஸ்ரயேல் மூப்பர்களையும், எகிப்தின் மந்திரவாதிகளையும் நம்ப வைப்பதற்காக அந்தக் கோலை தரையில் போட்டார் மோசே. அது பாம்பாக மாறியது. ஆனால் எகிப்தின் மந்திரவாதிகளும் அதே போல செய்தார்கள்.

    ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கி விட்டது என விவிலியம் குறிப்பிடுகிறது. இதன் மூலம், மாந்திரீகமும் அதன் சக்திகளும் கடவுளல்ல. உண்மைக் கடவுளுக்குள் அதெல்லாம் அடக்கம் எனும் சிந்தனை உறுதியாகிறது.

    மேய்ப்பனின் கோல், மந்திரவாதியின் கோல்களை அழிக்கிறது. அங்கே பத்து வாதைகள் நிகழ்கின்றன. கடைசியாக தலைச்சன் பிள்ளைகளும் மாண்டு போகின்றனர். ஆனால் இஸ்ரயேல் மக்கள் இழப்புகளின்றி தப்புகின்றனர்.

    அதற்காக அவர்கள் பலி செலுத்தி அந்த ரத்தத்தை நிலைக்கால்களில் பூசுகின்றனர். அந்த ரத்தம் இருந்த இஸ்ரயேலரின் வீடுகள் தப்புகின்றன. ரத்தம் மீட்பைக் கொடுத்தது.

    இந்த ரத்தம் இருளிலிருந்து விடுதலை அளிக்கிறது. “தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி ரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால் தான்” என்கிறது எபிரேயர் 11:28

    ஒட்டு மொத்த மனித சமூகத்திலிருந்து பிரிந்து இறைவனின் அன்போடு இணைந்திருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு உரிமை இது. நாம் புனிதமானவர்கள் என்பதல்ல அதன் பொருள், அவருக்குப் பிரியமானவர்கள் என்பதே அதன் பொருள்.

    இறைவனுடைய வார்த்தை வலிமையானது. அது படுபாவிகளையும் மீட்கும் வலிமையும், ஆசையும் கொண்டது. சிலுவையில் இறைமகன் இயேசு சிந்திய ரத்தம் மறைத்துக் காக்கும் ஆற்றல் கொண்டது.

    இறைவனின் அன்பையும், இயல்பையும் பல வகைகளில் கூறலாம்.

    1. கன்மலை இடுக்கில் மறைத்துக் காக் கிறவர்

    “என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்” (விடுதலைப்பயணம் 33:22) எனும் விடுதலைப்பயணம் நம்மை அவர் முழுமையாய் பாதுகாப்பவர் என்பதைச் சொல்கிறது.

    சிலுவையை நாம் ஏறெடுத்துப் பார்க்கும் போது இது நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அவருடைய பரிவும், இரக்கமும் காரணமாய் இருக்கிறது.

    2. சிறகு அடியில் புகலிடம் தரும் சிலுவை

    “கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.” (திருப்பாடல்கள் 57:1)

    இறைவனின் அன்பு, சிறகின் அடியில் பறவை தனது குஞ்சுக்கு தருகின்ற இதமான பாதுகாப்பைப் போன்றது. அழிவுக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் புகலிடமாகும் இடம் இறைவனின் சிறகுகளே. இடர்கள் முழுமையாய் நீங்கும் வரை அது நம்மைக் காக்கிறது.

    3. நிழலிலே அடைக்கலம் தரும் சிலுவை

    “உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் என்கிறது சங்கீதம். புயல் காற்றும், கடும் வெப்பமும் அழித்து விடாதபடி நம்மைக் காக்கின்ற நிழல் இறைவனின் அன்பு எனும் நிழல். இந்த நிழலில் அடைக்கலம் கொள்ளும் போது காப்பாற்றப் படுகிறோம். சிலுவையின் நிழல் நம்மை பாவ வெயிலில் இருந்து மனமாற்றத்தின் நிழலில் இளைப்பாற வைக்கிறது.

    4. கை நிழலிலே மறைவு சிலுவை

    “நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.” (ஏசாயா 51:16)

    கைகளின் நிழலில் நம்மைக் காக்கும் கடவுளாக இறைவன் இருக்கிறார். நாம் பாவத்தில் மாண்டு போகாமல் நம்மை அது காக்கிறது. அழிப்பவன் அசுர வேகத்தில் பாய்வான், சிலுவையோ நம்மை நிதானமாய்க் காக்கும். சரணடைதல் ஒன்றே அதை சாத்தியமாக்கும்.

    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது. 
    சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
    குளிர்கால கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு, தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு தங்கினார் தலைவர். அந்த வீடு ஒரு வசந்த பவனாக இருந்தது. தொண்டரோ வெளியில் தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    குளிர் ரத்தத்தை உறையச் செய்தது. கை, கால் விரல்கள் நடுங்கின. காலையில் தலைவர் தொண்டரை நலம் விசாரித்தபோது குளிர் என்றால் என்ன வென்றே தெரியாது போல பாவனை செய்தார் தொண்டர். தலைவர் மீது வைத்த அன்புக்காக அத்தொண்டர் இரவெல்லாம் துன்புற நேர்ந்தது. இதுதான் அன்பு வருத்தம் என்பது. அன்பு, துன்பங்களை கொண்டுவரும்.

    அத்துன்பங்களிலே தான் மகிழ்ச்சி மலர்ந்து மணம் வீசும். ஏழை கைம்பெண் (லூக் 21:4) தனக்கு பற்றாக்குறை இருந்தும் தனக்கு உள்ளது எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினாள். மறுநாள் கடினப்பட்டு உழைத்து உண்ண நேர்ந்திருக்கும். இங்கே தான் அன்பு துன்புறுத்துகிறது. பேறுகாலத்துயரை கடந்த தாய், தன் பச்சிளம் குழந்தையை பார்க்கிறபோது உலகில் ஒரு மகான் உதித்துவிட்டான் என்று பேருவகை கொள்கிறாள்.

    நாம் துன்புற்றாலும் ஏழைகளுக்கும் எளியவருக்கும் உதவுவது நம் கடமை. இயேசுபிரான் சிலுவையை சுமந்து தான் மனுக்குலத்தை அன்பு செய்தார். சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.

    குழந்தை, காணியிருப்பு. 
    இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக்கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன.
    “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக்கா 23:47)

    இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

    ஊருக்கு திரும்பும் ஒரு தொலை தூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் குதூகல மனநிலையாய், இயேசு தனது மண் வாழ்வை முடித்து வைக் கிறார்.

    நமது உயிர் இறைவனின் உயிர் மூச்சினால் உருவானது. அந்த உயிர்மூச்சு இறைவனிடமே திரும்பிச் செல்லும் எனும் உத்தரவாதமே இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியாக்கும். உயிரின் பிறப்பிடமும், உயிரின் புகலிடமும் இறைவனின் கரங்களே.

    “உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்” (சங் 31:5) எனும் இறைவாக்கின் நிறைவேறுதல் இது. இயேசு இங்கே, தந்தையே என்பதை சேர்த்துக் கொள்கிறார். உலகின் பாவத்தைச் சுமந்ததால் இறைவனின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விழுந்தவர் இயேசு. அப்போது, “இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” என கதறினார்.

    இப்போது எல்லாம் நிறைவேறியபின் மீண்டும் ‘தந்தையே’ என அழைத்து தன் உறவை உறுதி செய்து கொள்கிறார்.

    சிலுவையில் இயேசு ஏழு வார்த்தைகளைச் சொன்னார். ‘ஏழு’ என்பது முழுமையைக் குறிப்பது. தனது வாழ்வின் முழுமையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

    முதல் வாசகம் மன்னிப்பைப் பேசியது, இரண்டாவது வாசகம் மீட்பைப் பேசியது, மூன்றாவது வாசகம் பரிவைப் பேசியது, நான்காவது வாசகம் துயரத்தைப் பேசியது, ஐந்தாவது வாசகம் ஏக்கத்தைப் பேசியது, ஆறாவது வாசகம் வெற்றியைப் பேசியது, ஏழாவது வாசகம் ஆறுதலைப் பேசியது.

    ஆன்மிகத்தின் முழுமையும், செழுமையும் இயேசு பேசிய வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டன எனலாம்.

    ‘தந்தையே உம் கைகளின் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ எனும் வார்த்தையில் நம்பிக்கை வெளிப்படுகிறது. தந்தை தன்னை கைவிடமாட்டார் என முழுமையாய் நம்பும் மழலையின் மனநிலை அது. “நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும்” என இயேசு குறிப்பிட்டது தந்தை மீது கொள்ளவேண்டிய முழுமையான நம்பிக்கையையும் குறிக்கும்.

    தந்தையின் கரங்கள் ஆறுதலின் கரங்கள். தந்தையின் தோள்களில் துயிலும் மழலை எத்தனை சத்தங் களுக்கு இடையே வாழ்ந்தாலும் நிம்மதியாய் உறங்கும். பெற்றோரின் அருகாமை இல்லையேல் நிசப்தமான பஞ்சு மெத்தை கூட அவர்களை கலங்கடிக்கும். தூங்க விடாமல் செய்யும். இறைவனின் கரங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்கிறதா?

    தந்தையின் கரங்களில் கிடைப்பது முழுமையான பாதுகாப்பு. தந்தையின் விரலைப் பிடித்துக் கொண்டு செல்லும் மழலையின் முகத்தைப் பார்த்திருக் கிறீர்களா? உலகின் எந்த பெரிய வீரன் வந்தாலும் தந்தை தன்னைப் பார்த்துக் கொள்வார் எனும் அதிகபட்ச நம்பிக்கை அந்த கண்களில் மின்னும். இதைவிடப் பெரிய பாதுகாப்பு இனிமேல் இல்லை எனும் நிம்மதி அந்த முகத்தில் தெரியும்.

    நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் கேட்கிறது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்று பவர்களுக்கு மட்டுமே தந்தையின் கரம் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிராகரித்து நடப்பவர்கள் எப்போதுமே அந்த கரங்களுக்குள் அடைக்கலம் புகுவதில்லை.

    அந்த நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    தந்தையின் கரத்தோடு இணைந்து இருப்பவர்களுக்கே ஆறுதல் கிடைக்கும். நமது வாழ்க்கை எதில் ஆறுதல் அடைகிறது. உலகத்தின் கரங்களிலா? அல்லது உன்னதரின் கரங்களிலா?

    தந்தையோடு இருப்பதே உண்மையான பாதுகாப்பு. நமது வங்கிக்கணக்குகளும், நில புலன்களும் நமக்கான பாதுகாப்பல்ல. களஞ்சியத்தை எவ்வளவு தான் இடித்துக் கட்டினாலும் ஆன்மா இழந்து போனால் என்ன பயன்?

    நமது நம்பிக்கையை அழிந்து போகும் செல்வங்களிலிருந்து மாற்றி, இறை வனின் அருகாமையில் வைப்போம்.

    “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்..” என யோவான் 10:27-28 ல் இயேசு கூறினார்.

    இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக்கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன.

    நமது இதயம் எங்கே இருக்கிறது? இறைவனின் கரங்களிலா? உலகத்தின் கரங்களிலா?

    “நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.

    “அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” எனும் எபிரேயர் 12:2 வசனத்தில் நம்பிக்கை வைப்போம்.

    - சேவியர்.
    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.
    “எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

    இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது.

    ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

    இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது.

    சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல.

    ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

    தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

    இதன் எபிரேய வார்த்தை ‘டிடிலெஸ்தாய்’ என்பது. அதன் பொருள், ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

    முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து ரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” (எபேசியர் 1:7) எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

    பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறை மகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது.

    இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

    இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண் கிறோம்” (எபி 2:9) என்கிறது விவிலியம்.

    வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மிக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

    அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம்.

    பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

    “இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் ரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19.

    இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

    “தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்” (எபி 10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

    “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறை மகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

    நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

    “எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா?. முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா?. இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா”.

    இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

    சேவியர்
    ×