search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "included"

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் அமர்வில் இன்று இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் 29-ம் தேதி முதல் விசாரணை தொடங்கவுள்ளது. #justiceAbdulNazeer #justiceAshokBhushan #Supremecourt #Ayodhyabench
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.



    இந்த அமர்வு ஜனவரி 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
    கடந்த 10-ம் தேதி 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னர் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது, இவ்வழக்கில் ஒருதரப்பான முஸ்லிம் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தாவான், ‘இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான யூ.யூ.லலித் கடந்த 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பில் ஆஜரானவர்’ என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் சுட்டிக்காட்டினார்.

    அதனால், இந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என நான் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதைக்கேட்ட நீதிபதி யூ.யூ.லலித் ’இந்த அமர்வில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என உடனடியாக தெரிவித்தார். அவரது கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இதையடுத்து, இந்த அமர்வு இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

    அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று நியமித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட இந்த புதிய அமர்வு வரும் 29-ம் தேதியில் இருந்து அயோத்தி வழக்கை விசாரிக்க தொடங்குகிறது. #justiceAbdulNazeer #justiceAshokBhushan #Supremecourt #Ayodhyabench
    மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பினராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×