search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "History of Azhwar"

    • குமரியாக இருக்க அருள்புரிந்தார்.
    • காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    1. ஆழ்வார் உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேறு கிட்டா தம்பதியினருக்கு இளமை நல்கி, குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு, கணிக்கண்ணன் என்று நாமமிட்டு, தன்னோடு தன் அந்தரங்க சிஷ்யராகக் கொண்டிருந்தார்.

    2. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயோதிக பெண்ணிற்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க அருள்புரிந்தார். ஒருநாள் இந்த குமரியைக் கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான்.

    வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய, அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான். கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

    ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்கப் போவதில்லை; நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை எனப் புறப்பட்டார். அப்போது பாடிய பாடல்.

    `கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போகின்றேன்

    நீயுமுன்றன்

    பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்'

    ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகளும் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில் ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு `ஓரிரவிருக்கை' என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது. காஞ்சி இருளால் சூழ்ந்ததும், அரசன் பல்லவராயன் தன் தவற்றை உணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள ஒரு பாடல் பாடினார்.

    `கணிக்கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

    மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய

    செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

    பைந்நாகப் பாய்படுத்துக்கொள்'

    ஆழ்வார் சொற்படி நடந்ததால், திருவெஃகா பெருமாளுக்கு, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்பெயர். பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.

    3. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார்.

    புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சந்நதிக்குச் சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்தில் இருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.

    `நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்

    இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்

    கடந்த கால் பரந்த காவிரிக் கரைக்

    குடந்தையுள்

    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு, வாழி! கேசனே!'

    இங்ஙனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக (எழவும் படுக்கவும் இல்லாத இடைநிலை) நின்றுவிட்டாராம்.

    ×