search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Judges"

    டாக்டர்களின் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #DoctorsStrike #HC
    சென்னை:

    அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நவம்பர் 28ந்தேதி திருச்சியில் நடந்தது.

    அதில், மற்ற மாநிலங்களில் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழக அரசு டாக்டர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் ஊதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அதிகரிக்க கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

    அதில், டிசம்பர் 4ந் தேதி (இன்று) முதல் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை வழங்குவதை முழுமையாக நிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது.

    வருகிற 8ந்தேதி முதல் 13ந்தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சை வழங்குவதை நிறுத்துவது. 27ந்தேதி முதல் 29ந்தேதி வரை 3 நாள் தொடர் அடையாள வேலை நிறுத்தம் நடந்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை இயற்றியது.

    இதன்படி இன்று காலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காமல், டாக்டர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இதையடுத்து மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் வாராகி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு வாராகி சார்பில் அவரது வக்கீல் முறையிட்டார்.

    அப்போது நீதிபதிகள், ‘டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், மனுதாரர் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. வரிசையின் அடிப்படையில், அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #DoctorsStrike #HC

    பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் அவமதிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HighCourt #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையிலுள்ள ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி தகில்ரமணி பதவியேற்பு விழாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான படி நிலை வரிசை காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியல மைப்பு படிநிலை வரிசைப்படி மரியாதை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தகில்ரமணியின் பதவியேற்பு விழா ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப்படி நிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது. ஆனால், நேற்றைய விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

    தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படி தங்களுக்கு மரியாதை வழங்கப்படாததால் வருத்தமடைந்த இரு நீதிபதிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்பு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலையிட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வெளி நடப்பு செய்வதைத் தடுத்துள்ளார். மற்ற நீதியரசர்களும் இந்த அவமதிப்பால் வேதனை அடைந்தாலும், நாகரிகம் கருதி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

    உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு நீதியரசர் ரமேஷ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படியான மரியாதை வழங்கப்படாதது வருத்த மளிப்பது மட்டுமின்றி, மிகவும் கவலையளிக்கும் நிகழ்வும் ஆகும். அரசியலமைப்புச் சட்ட பேராளர்களான நீதிபதிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்குமான படிநிலை வரிசை ஆளுனர் மாளிகை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அமைச்சர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கீழானவர்கள் தான் நீதிபதிகள் என்பது தான் அவர்களின் புரிதலா?’’ என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாக்கள் நியாயமானவை; ஆளுனர் மாளிகையால் விளக்கமளிக்கப்பட வேண்டியவை.

    மாநில அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களிலும், மற்ற நிகழ்வுகளிலும் படி நிலை வரிசை பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்காகவே தமிழக அரசின் பொதுத்துறையில், துணை செயலாளர் நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அப்பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி இதற்கு முன் ஆளுனர் மாளிகையில் பணியாற்றியவர் தான்.

    இருந்தும் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை தடுத்து நிறுத்த தவறியது கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய அவமதிப்பு இழைக்கப்பட்டது குறித்து ஆளுனர் மாளிகை விளக்க மளிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நடந்த தவறுக்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை வக்கீல் ஆனார். அவருக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதயக்குமார். பரமக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்து, அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சட்டம் படிக்க விரும்பிய அவர், சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டு சட்டப்படிப்பை 2007-ம் ஆண்டு நிறைவு செய்தார்.

    சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே திருநங்கையாக மாறிய அவர், தனது பெயரை சத்யஸ்ரீ என்று மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனது சொந்த விருப்பத்தின்படி பெற்றோரை பிரிந்துவிட்டார். சட்டப்படிப்பை முடித்ததும் அவர் செங்கல்பட்டு நடராஜ நகரில் தங்கியிருந்து மற்றொரு திருநங்கையான ஷர்மிளாவுடன் இணைந்து சமூகசேவை செய்துவந்தார்.

    ஷர்மிளா அவருக்கு ஆதரவாக இருந்ததால் தனது பெயருடன் ஷர்மிளா பெயரையும் சத்யஸ்ரீ சேர்த்துக்கொண்டார். இவர், சட்டப்படிப்பை முடித்தபோது திருநங்கை என்ற பாலினத்தின் அடிப்படையில் வக்கீலாக பதிவு செய்ய இயலாது என்ற நிலை இருந்தது. திருநங்கைகளை 3-ம் பாலினத்தவர் என்ற அங்கீகாரத்துடன் வக்கீலாக பதிவு செய்யும் அனுமதிக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில், அவருக்கு வக்கீலாக பதிவு செய்ய இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சத்யஸ்ரீ ஷர்மிளா வக்கீலாக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீலாக பதிவு செய்ய அவருக்கு அழைப்புவிடுத்தது.

    அதன்படி, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் நேற்று நடந்த பதிவு நிகழ்ச்சியில் சத்யஸ்ரீ ஷர்மிளா கலந்துகொண்டு வக்கீலாக தனது பெயரை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான சத்யஸ்ரீ ஷர்மிளா வக்கீல் ஆகியுள்ளார்.

    அவருக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எம்.கோவிந்தராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள், திருநங்கைகள் பாராட்டு தெரிவித்தனர். ‘வக்கீல் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு நீதிபதியாக வரவேண்டும்’ என்று அவரை நீதிபதிகள் பாராட்டினர்.

    ‘திருநங்கைகள் மட்டுமன்றி ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி கிடைக்க பாடுபடுவேன்’ என்று சத்யஸ்ரீ ஷர்மிளா நிருபர்களிடம் கூறினார்.

    கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாஷினி இந்தியாவின் முதல் பெண் சப்-இன்ஸ்பெக்டராக சென்னையில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தியின் மகன் விஜய்மகேஷ் உள்ளிட்ட பலர் நேற்று வக்கீல்களாக பதிவு செய்துகொண்டனர்.
    ×