search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transgender lawyer"

    இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை வக்கீல் ஆனார். அவருக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதயக்குமார். பரமக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்து, அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சட்டம் படிக்க விரும்பிய அவர், சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டு சட்டப்படிப்பை 2007-ம் ஆண்டு நிறைவு செய்தார்.

    சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே திருநங்கையாக மாறிய அவர், தனது பெயரை சத்யஸ்ரீ என்று மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனது சொந்த விருப்பத்தின்படி பெற்றோரை பிரிந்துவிட்டார். சட்டப்படிப்பை முடித்ததும் அவர் செங்கல்பட்டு நடராஜ நகரில் தங்கியிருந்து மற்றொரு திருநங்கையான ஷர்மிளாவுடன் இணைந்து சமூகசேவை செய்துவந்தார்.

    ஷர்மிளா அவருக்கு ஆதரவாக இருந்ததால் தனது பெயருடன் ஷர்மிளா பெயரையும் சத்யஸ்ரீ சேர்த்துக்கொண்டார். இவர், சட்டப்படிப்பை முடித்தபோது திருநங்கை என்ற பாலினத்தின் அடிப்படையில் வக்கீலாக பதிவு செய்ய இயலாது என்ற நிலை இருந்தது. திருநங்கைகளை 3-ம் பாலினத்தவர் என்ற அங்கீகாரத்துடன் வக்கீலாக பதிவு செய்யும் அனுமதிக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில், அவருக்கு வக்கீலாக பதிவு செய்ய இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சத்யஸ்ரீ ஷர்மிளா வக்கீலாக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீலாக பதிவு செய்ய அவருக்கு அழைப்புவிடுத்தது.

    அதன்படி, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் நேற்று நடந்த பதிவு நிகழ்ச்சியில் சத்யஸ்ரீ ஷர்மிளா கலந்துகொண்டு வக்கீலாக தனது பெயரை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான சத்யஸ்ரீ ஷர்மிளா வக்கீல் ஆகியுள்ளார்.

    அவருக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எம்.கோவிந்தராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள், திருநங்கைகள் பாராட்டு தெரிவித்தனர். ‘வக்கீல் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு நீதிபதியாக வரவேண்டும்’ என்று அவரை நீதிபதிகள் பாராட்டினர்.

    ‘திருநங்கைகள் மட்டுமன்றி ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி கிடைக்க பாடுபடுவேன்’ என்று சத்யஸ்ரீ ஷர்மிளா நிருபர்களிடம் கூறினார்.

    கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாஷினி இந்தியாவின் முதல் பெண் சப்-இன்ஸ்பெக்டராக சென்னையில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தியின் மகன் விஜய்மகேஷ் உள்ளிட்ட பலர் நேற்று வக்கீல்களாக பதிவு செய்துகொண்டனர்.
    ×