search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Kidnap"

    • நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர்.
    • நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பின் இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டில் இருந்து கடத்தல்காரர்கள் அதிகளவில் தங்க கட்டிகளை ராமநாதபுரத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடல் வழித்தடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது படகில் வந்த கடத்தல்காரர்கள் மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக படகில் இருந்த வேதாளையை சேர்ந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி ஏற்கனவே கடத்தி வேதாளையை சேர்ந்த ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நிபுணத்துவம் பெற்ற நீச்சல் பயிற்சி பெற்ற, வீரர்கள் உதவியுடன் தங்க கட்டிகள் வீசப்பட்ட கடலில் இறங்கி தேடும் பணி நடந்தது.

    நவீன சுவாச கருவிகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றின் உதவியுடன் நீச்சல் வீரர்கள் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டிகளை தேடினர். ஆனால் 2 நாட்களாக எதுவும் சிக்கவில்லை. இரவு நேரங்களில் வேறு யாரேனும் அந்தப் பகுதிகளில் இறங்கி தங்க கட்டிகளை எடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்க கட்டிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் தற்போது கடல் காற்று அதிகமாக வீசி வருவதால் சில மணி நேரம் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அதிகாரிகளின் தகுந்த ஆலோசனையோடு வீரர்கள் தொடர்ந்து தங்க கட்டிகளை தேடி வந்தனர். இவர்களோடு நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினரும் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் இன்று மதியம் ஆழ்கடலில் தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்த பார்சலை கடலோர காவல்படை வீரர்கள் கண்டெடுத்து மீட்டனர். மேலே கொண்டு வரப்பட்ட பார்சல் மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் கட்டி உடைக்கப்பட்டது. அப்போது அதில் 10 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி ஆகும். தங்கத்தை மீட்ட அதிகாரிகள் அதனை கடத்தி வந்த கும்பல் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.
    • பயணிகளை அழைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை பீளேமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுகிறதா? என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படி கடத்தி வரப்பட்டால் அதனை பறிமுதல் செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கடந்த 9-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது.

    இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களை அழைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? வரி செலுத்தி உள்ளீர்களா? என விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக அதிகாரிகள் 20 பயணிகளிடம் இருந்து 7½ கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×