search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former DGP"

    • முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
    • ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    • 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு ஐ.பி.சி. 354 (எ) பிரிவின் கீழ் பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மற்றுமொரு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஐ.பி.சி. 341 பிரிவின் கீழ் பெண்களை சீண்டியதற்காக ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதனை ஏக காலத்தில் கடுங்காவல் சிறை தண்டனையாக அனுபவிக்கவும் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அபராதமாக மொத்தம் ரூ.20 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டது.

    இவ்வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு உடந்தையாக இருந்த முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணணுக்கு ரூ.500 மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கு சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும், இவ்விருவர் மீதும் தொடரப்பட்ட ஐ.பி.சி. 506 பிரிவின் கீழ் மிரட்டிய வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

    கோர்ட்டில் 7 ஆண்டிற்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட விதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமின் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர்.

    இதன் மீதான விசாரணையில் முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
    • கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதியன்று நிறைவடைந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந்தேதி (இன்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் கோர்ட்டிற்கு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து கோர்ட்டிற்கு வந்த நீதிபதி புஷ்பராணி, 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,5௦௦ அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    கோர்ட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட வீதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர். இது தொடர்பாக இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதில் இவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் கூறினர்.

    ×