search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish price hike"

    • சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன.
    • பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் இந்த மீன்பிடி தடைகாலம் நீடிக்கிறது.

    இதைத்தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் குறைந்த அளவு மீன்கள் விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தன.

    சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன. பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்ட நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் மீன் விற்பனை களைகட்டியது.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை (கிலோவில்) வருமாறு:-

    சங்கரா-ரூ.500, கொடுவா-ரூ.600, பாறை-ரூ.600, இறால்-ரூ.500, கிழங்கா-ரூ.500, ஷீலா-ரூ.600.

    இதேபோல், திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வளர்ப்பு மீன்களான கட்லா மீன், கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் உள்ளிட்ட மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்திருந்தது. அதனையும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
    ராயபுரம்:

    மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக விசை படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பைபர் மற்றும் கட்டுமரங்கள் மட்டுமே கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    எனவே வஞ்சிரம், இறால், வவ்வால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைப்பதில்லை. சங்கரா, நவரை, கவளை போன்ற சிறிய ரக மீன்களே பிடிக்கப்படுகின்றன. அதுவும் மிக குறைந்த அளவே கிடைக்கின்றன.

    இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளிலும், 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் 300-க்கும் அதிகமான கட்டு மரங்களிலும் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

    இதில் விசை படகுகள் நிறுத்தப்பட்டதாலும் மற்ற படகுகளில் வரும் மீன்வரத்து குறைந்ததாலும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    முன்பு கிலோ ரூ.1000 வரை விற்கப்பட்ட பெரிய ரக வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,600 வரை விற்கப்படுகிறது. சின்ன வஞ்சிரம் மீன் ரூ.600-ல் இருந்து ரூ. 750 ஆக உயர்ந்துள்ளது.

    வவ்வால் ரூ.500-ல் இருந்து ரூ.800ஆகவும், கடமா ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆகவும், கொடுவா ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆகவும், நவரை ரூ.200-ல் இருந்து ரூ.350 ஆகவும், சங்கரா ரூ.250-ல் இருந்து ரூ.450-ஆகவும், கவளை ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் அதிகரித்துள்ளது.

    இதனால் சிறிய வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் வாங்குவதை குறைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வருகின்றன. சீசன் காலங்களில் 40 முதல் 50 லாரிகள் வரும். தற்போது 12 முதல் 22 லாரிகள் வரைதான் மீன்கள் வருகின்றன.

    இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த வாரம் இங்கு ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் தற்போது ரூ.800, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட சங்கரா ரூ.150 என்று விலை உயர்ந்துள்ளது. இதுபோல மற்ற மீன்களின் விலைகளும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது” என்றார்.
    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன் விலை அதிகரித்துள்ளது.
    கீழக்கரை:

    தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டிணம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களே விற்பனைக்கு வருகிறது.

    அந்த மீன்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மீன்களாகவே உள்ளது. வேறு வழியின்றி மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ ரூ.500-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.
    ×