search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு- வஞ்சிரம் ரூ.2 ஆயிரத்து விற்பனை
    X

    காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு- வஞ்சிரம் ரூ.2 ஆயிரத்து விற்பனை

    • சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன.
    • பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் இந்த மீன்பிடி தடைகாலம் நீடிக்கிறது.

    இதைத்தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் குறைந்த அளவு மீன்கள் விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தன.

    சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன. பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்ட நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் மீன் விற்பனை களைகட்டியது.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை (கிலோவில்) வருமாறு:-

    சங்கரா-ரூ.500, கொடுவா-ரூ.600, பாறை-ரூ.600, இறால்-ரூ.500, கிழங்கா-ரூ.500, ஷீலா-ரூ.600.

    இதேபோல், திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வளர்ப்பு மீன்களான கட்லா மீன், கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் உள்ளிட்ட மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்திருந்தது. அதனையும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.

    Next Story
    ×