search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federal govt"

    மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் ஊராட்சி சபை கூட்டம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    திருச்சி:

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கங்களுடன் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கிவைத்து திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார். நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

    இதையடுத்து இரவு திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் சங்கம் ஓட்டலில் தங்கினார். இன்று காலை காரில் புறப்பட்ட அவர் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று தமிழ்நாடு இருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். இந்த கிராமசபை கூட்டம் நடைபெறும் இடத்தில் கோவில் உள்ளது. கோவிலுக்கு நான் செல்ல வேண்டியது என்பதில்லை. உங்களை பார்ப்பதே கோவிலுக்குள் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    மகாத்மா காந்தி கிராமங்களை அதிகம் விரும்புவார். ஒரு கிராமத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்றால் பண்டைய காலத்தில் மக்கள் அந்த கிராமத்திற்கு ஒரு மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்வார்கள்.

    பண்டைய காலத்தில் அதற்காக குடவோலை என்ற முறையை பயன்படுத்தினார்கள். குடவோலை சீட்டு மூலம் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ததற்கான சான்றுகள் காஞ்சிபுரம் ஊருக்கு அருகிலும், கும்பகோணம் அருகில் பள்ளி பாக்கியத்திலும் கல்வெட்டுக்களாக இருந்தது.

    ஆனால் அது இப்போது இல்லை. அதன்பிறகு தேர்தல் முறையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு மூலம் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள். இப்போது எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கிறார்கள்.

    நாளை இதுவும் மாறலாம். தேர்தல் நேரங்களில் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து முட்டி, மோதி வாக்களிக்கிறார்கள். மக்கள் மூலம் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை சட்டமன்றத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கும் செல்கிறார்கள்.

    இவ்வாறு மக்கள் பிரநிதிகளை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரங்களில் மக்களிடம் சென்று பிரசாரம் செய்கிறார்கள். தங்கள் கட்சி சார்பில் யார் நிற்கிறார்கள், என்ன செய்ய போகிறோம் என்று கூறி பிரசாரம் செய்கிறோம். ஆனால் இந்த பிரசாரம் கிராமங்கள் வரை சென்றடைகிறதா என்றால் இல்லை.

    எங்களை போன்ற தலைவர்கள் டவுன் மற்றும் பேரூர் பகுதிகளில் வேனில் நின்ற படி கையசைத்துவிட்டு பேசி ஓட்டு கேட்கிறோம். கிராமங்களுக்கு வேட்பாளர்கள் கூட செல்ல முடியவில்லை. இதற்கு நேரம் இல்லாததே உண்மையான காரணம். இதுதான் யதார்த்த நிலை.



    ஆனால் ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்துதான் பிரசாரங்கள் தொடங்கின. தெருக்கூத்துகள், ஓரங்க நாடகங்கள், கழைக்கூத்துகள் மூலம் பிரசாரங்கள் நடந்தன. அதன்பிறகு மாற்றம் ஏற்பட்டது. தற்போது கிராமங்களுக்கெல்லாம் டி.வி. வந்து விட்டது. முதல்வராக இருந்தபோது கருணாநிதிதான் இலவசமாக டி.வி.யை கொடுத்தார். டி.வி.க்கு இப்போது மவுசு குறைந்து விட்டது. தற்போது செல்போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு சிலர் 2 செல்போன்கள் வரை வைத்துள்ளனர்.

    செல்போன் இல்லாவிட்டால் வாழவே முடியாது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் சில ஊடகங்கள் தி.மு.க.வின் வளர்ச்சியை பிடிக்காமல் திட்டமிட்டு எதிர்ச்செய்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். அவர்களால் தி.மு.க. வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    எனவே இதுபோன்ற கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகிறோம். இங்கே வந்துள்ள கூட்டத்தை பார்க்கும்போது, எங்களைவிட உங்களுக்குத் தான் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளதை பார்க்கிறோம். இந்த ஊராட்சி பகுதிகளில் பல பிரச்சனைகள் உள்ளது. குடிநீர், சாக்கடை, மின் விளக்கு, சாலை என பல பிரச்சனைகள் உள்ளன.

    நேற்று திருவாரூர், தஞ்சை கிராமசபை கூட்டங்களிலும் மக்கள் இதைத்தான் கூறினார்கள். இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த நிலைதான் உள்ளது. தமிழகத்தில் 12,617 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் நான் செல்ல முடியாது. முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிகளுக்கு சென்றுள்ளேன். என்னை போன்றே 400 பேரை தேர்வு செய்து அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று கிராமசபை கூட்டங்களை நடத்த அறிவுறுத்தி உள்ளேன்.

    இங்கே உங்கள் பிரச்சனைகளை தெரிவியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம். உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இதுபோன்ற நிலை இருந்திருக்காது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. உள்ளாட்சி தேர்லை நடத்தி இருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் உங்கள் பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.

    தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி பணிகளை செய்தோம். மற்ற துறைகளின் மூலமும் நிதி ஒதுக்கி ரூ.1 கோடி வரையில் பணிகளை செய்துள்ளோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெற்று செல்வாக்கு பெற்றுவிடும் என்பதால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வேண்டுமென்றே வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.

    உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த ஊராட்சி சபை கூட்டம்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin

    ×