search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinkers"

    விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
    சிதம்பரம்:

    சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணிக்க ராஜ் (வயது 40), அம்பத்தூரை சேர்ந்த முருகன் (37), சென்னை ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.

    தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.

    இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. குடிபோதையில் இருந்த 5 பேரும் போலீசாரிடம் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


    பழவேற்காடு பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ‘குடி’மகன்கள் படையெடுத்தனர். இதனால் மதுக்கடை திறப்பதற்கு முன்னரே அப்பகுதியில் கடும் கூட்டம் நிலவியது.
    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

    இதேபோல் பழவேற்காடு ஏரி பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பழவேற்காடு பஜாரில் இருந்து கடற்கரைக்கு செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது.

    சுற்றுலா வந்த ‘குடி’மகன்கள் பழவேற்காடு பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் படையெடுத்தனர். இதனால் மதுக்கடை திறப்பதற்கு முன்னரே அப்பகுதியில் கடும் கூட்டம் நிலவியது.

    மதியம் 12 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டதும் அவர்கள் மதுபாட்டில் வாங்க ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் ‘குடி’மகன்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மதுக்கடை ஊழியர்கள் மதுபாட்டில் கொடுக்க முடியாமல் திணறினர். ஏராளமான குடிமகன்கள் நெரிசலில் சிக்கி மதுபாட்டில்களை வாங்கிய உற்சாகத்தில் ஆர்ப்பரித்து சென்றனர். சிலர் மதுபாட்டில் வாங்குவதற்காக சுமார் ½ மணி நேரம் வரை காத்திருந்தனர்.

    குடிமகன்கள் திரண்டதால் அந்த மதுக்கடையில் இருந்த அனைத்து மதுபாட்டில்களும் விற்றுத் தீர்ந்தது. இதையடுத்து தங்களுக்கு பிடித்தமான மதுவகையை வாங்க சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மெதூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் சென்றனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் மது விற்பனை ரூ. 500 கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×