search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharna protests by"

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×