search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daughter Murder"

    • வர பிரசாத்தின் மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.
    • விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். இவர் சவ ஊர்வலம் வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் லிகிதா ஸ்ரீ (வயது 16).

    இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். பிரசாத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆனாலும் தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் எண்ணினார்.

    ஆனால் அவருடைய மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் லிகிதா ஸ்ரீயும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவரது காதல் விவகாரம் தந்தை வரப்பிரசாத்திற்கு தெரியவந்தது. அப்போது தனது மகளிடம் நீ காதலிக்கும் வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. எனவே அவனை நீ காதலிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தார்.

    இருப்பினும் லிகிதா ஸ்ரீ வாலிபர் உடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வரப்பிரசாத் நேற்று மாலை மகள் கல்லூரியில் இருந்து வந்தவுடன் வாலிபர் உடனான காதலை கைவிடும்படி எச்சரித்தார்.

    இதற்கு லிகிதாஸ்ரீ மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வரபிரசாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் லிகிதா கதறி துடித்தார்.

    சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்து போன மகள் உடலுடன் செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    அப்போது அவர் தனது பேச்சை கேட்காமல் வாலிபரை காதலித்ததால் மகளை கழுத்து அறுத்துக் கொண்டதாக வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசில் சரண் அடைந்தார்.

    தனக்கு பிடிக்காத வாலிபரை காதலித்ததற்காக பெற்ற மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை.
    • காளிமுத்துவின் சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகளை தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    மனைவி பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சில நாட்களுக்கு பிறகு மேலூரில் உள்ள சகோதரி வீட்டில் காளிமுத்து மட்டும் இருந்துள்ளார். அவரிடம் தன்ஷிகா குறித்து கேட்டபோது, சிவகங்கையில் தனது அக்காள் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காளிமுத்து வீட்டில் இருந்த பரணில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பரணில் இருந்த ஒரு சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதனுள் பிளாஸ்டிக் வாளியில் அழுகிய நிலையில் சிறுமி தன்ஷிகா பிணம் இருந்தது.

    தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி தன்ஷிகாவை அவளது தந்தை காளிமுத்துவே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை யாருக்கும் தெரியாமல் வாளிக்குள் அடைத்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டு பரணில் தூக்கி வைத்து சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    அவரை போலீசார் தேடிய போது தலைமறைவாகி விட்டார். பெற்ற மகளை கொடூரமாக கொன்ற காளிமுத்துவை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோர் உத்தரவின் பேரில் தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் காளிமுத்துவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்கவில்லை. அவரது சகோதரி வீடு சிவகங்கையில் இருப்பதால் அங்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காளிமுத்து பிடிபடவில்லை.

    இந்த நிலையில் போலீசில் சிக்காமல் இருக்க காளிமுத்து பிச்சைக்காரர் வேடத்தில் திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் மதுபானக்கடை அருகே படுத்திருந்த காளிமுத்து போலீசாரிடம் நேற்றிரவு சிக்கினார்.

    பிச்சைக்காரர் வேடத்தில் இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெற்ற மகளை கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கூறியதாவது:-

    எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நான் மாற்றுத்திறனாளி என்றபோதிலும் டெய்லர் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இருவரும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தோம்.

    சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மகள் தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு சென்றேன். எனக்கு வாழ பிடிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு எனது மகளுடன் ஜெய்ஹிந்துபுரம் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கு எனது மனைவி இல்லை. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது மகள் மீது எனக்கு அதிக பாசம் உள்ளது. இதனால் இறந்த பிறகு அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று நினைத்தேன்.

    ஆகவே மகளை கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன்படி மகள் தன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்பு அவளது கை, கால்களை கட்டி வாளிக்குள் அடைத்து மூட்டை கட்டி வீட்டு பரணில் வைத்தேன்.

    அதன்பிறகு நான் தற்கொலை செய்து கொள்ள பயந்து வெளியூருக்கு சென்று விட்டேன். பின்பு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தேன். அங்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தினேன். மதுரையில் திரிந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காளிமுத்து கூறும் தகவல் உண்மைதானா? என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் கர்ப்பமாக உள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.
    • மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தாடே பத்ரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். சிறுமி தாடி பகுதியில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.

    அப்போது மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்தார். மாணவியும் வாலிபரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். இதனால் மாணவி 3 மாதம் கர்ப்பமானார்.

    மாணவி கர்ப்பமாக உள்ளது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகளை அறையில் அடைத்து தாயின் கண் முன்னே உலக்கையால் தாக்கினார்.

    மாணவி வலியால் அலறி துடித்தார். இருப்பினும் கல் நெஞ்சம் படைத்த அவரது தாய் மகளை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மகள் இறந்து விட்டதாக கூறியதைக் கேட்ட அவரது பெற்றோர்கள் கதறி துடித்தனர். மகள் மீது இருந்த ஆத்திரத்தில் அவசரப்பட்டு அடித்து கொலை செய்து விட்டதாக புலம்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாடே பத்ரி போலீசார் வந்து மாணவியின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×