search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dangerous to drink"

    • கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
    • மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும்.

    காலையில் எழுந்ததும் வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும், மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று கருதுகிறார்கள். அதனை ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆமோதிக்கிறார்கள்.

    ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்காக பலரும் நாள் முழுவதும் வெந்நீர் பருகிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி பருகுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் 6 முதல் 10 டம்ளர் சூடான நீர் பருகலாம் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அதிகபட்சம் ௧௦ டம்ளர் வரை பருகலாம் என்றும் கூறுகிறார்கள். சூடான நீரை பருகும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

    அடுப்பில் தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி அதே சூடோடு பருகும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அது தவறானது. சூடான நீரை 136 டிகிரி பாரன்ஹீட் அல்லது 57.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்போது பருகுவதுதான் சரியானது. இந்த வெப்பநிலையை குறைத்துக்கொள்ளலாம். ஓரளவு சூடு ஆறியதும் பருகினால் கூட தவறில்லை. ஆனால் ௧௫௦ டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலையில் இருக்கும்போது வெந்நீர் பருகுவது ஆபத்தானது.

    அத்தகைய கொதிநிலை கொண்ட சூடான நீர் உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். மேலும் சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். வாயின் உட்பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கிவிடும். தொடர்ந்து 150 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையில் சூடான நீரை பருகி வந்தால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

    சூடான நீர் மட்டுமல்ல காபி, டீ போன்ற பானங்கள் பெரும்பாலும் அதிக கொதிநிலையிலேயே வழங்கப்படுகின்றன. அதாவது ௧௬௦ டிகிரி பாரன்ஹீட் (71.1 டிகிரி செல்சியஸ்) முதல் 185 டிகிரி பாரன்ஹீட் (85 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையில் தயாரித்தவுடன் பரிமாறப்படுகின்றன. ஆனால் அதனை பருகும்போது 140 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவான வெப்பநிலைதான் இருக்க வேண்டும். எனவே ஆவி பறக்க, உதடுகளில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். உதடுகளுக்கு இதமாக, இளஞ்சூட்டில் பருகுவதுதான் சரியானது.

    வெந்நீரை பொறுத்தவரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. அது வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும். அத்துடன் செரிமான உறுப்புகளைத் தூண்டி, அன்றைய பணிகளுக்கு தயார்படுத்த உதவும். உணவுத் துகள்களை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தவும் உதவும். காலை வேளையில் இரண்டு டம்ளர்கள் வரை வெந்நீர் பருகலாம்.

    இரவில் தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பும் வெந்நீர் பருகலாம். இது தொண்டைப்புண், இருமலை தணிக்க உதவும். மன அழுத்தத்தை குறைக்க உதவும். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். இரவு முழுவதும் நீரேற்றமாக இருப்பது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு வழிவகுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    ×