search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist personal"

    விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 48). தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி(40). இவர் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மகளிரணி அமைப்பாளராக உள்ளார்.

    நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு அவர்களது குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கதிர்வேலின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கதிர்வேலின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கத்தியால் அறுத்தனர். இதில் கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த செண்பகவள்ளி தனது கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என கூச்சல் போட்டார். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அவரது சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை. பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை.

    செண்பகவள்ளி சத்தம் போட்டதை தொடர்ந்து அந்த மர்மகும்பல் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் கதிர்வேலின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே செண்பகவள்ளி வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    பின்னர் அவர் வீட்டின் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரவு காவலாளியாக இருந்த நபரிடம் சென்று தனது கணவர் கொலை செய்யப்பட்ட விவரத்தையும், வீடு தீப்பற்றி எரிவதையும் கூறி அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இதையடுத்து செண்பகவள்ளியும், காவலாளியும் சேர்ந்து பிணமாக கிடந்த கதிர்வேலின் உடலை மீட்டு வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் செண்பகவள்ளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கதிர்வேலை கொலை செய்து வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×