search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commercial company"

    தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரம்:

    தமிழக அரசு ஜனவரி 1-ந் தேதி முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

    அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவுக்கடைகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

    ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் முதல் உணவு கடைகள் என பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சோதணை நடத்தினர். அப்போது 66 கடைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன்னுக்கும் மேலான ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுத்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இந்த சோதனையில் ராமேசுவரம் வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவா, செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.

    கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    ×