search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collection center"

    • வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் இன்று முதல் வரி வசூலிப்பு மையங்களில் செலுத்தலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை மறுசீரமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது. அதனால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட பயனீட்டு கட்டணம் உள்ளிட்டவை வரி வசூல் மையத்தில் செலுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வரி செலுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் இன்று முதல் அனைத்து வரி மற்றும் கட்டணங்களை பணமாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.0 மணி வரை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    எளிய முறையில் வரி மற்றும் கட்டணங்களை https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக கட்டணமின்றி பயன்படுத்தலாம். 4 மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் சேவைகளான சொத்துவரி விதித்தல், காலியிட வரி விதித்தல், பெயர் மாறுதல்கள் செய்தல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தால் உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    ×