search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai water board"

    • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
    • தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் செலுத்தலாம்.

    சென்னை :

    இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் கடந்த 6-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அல்லது பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண் 044-45674567 மற்றும் இணையதளம் https://cmwssb.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டத்திபடி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

    தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1,800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (6 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஆண்டுகளில்) செலுத்தலாம்.

    தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் 2,700 சதுரஅடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு ஒரே தவணையாகவோ அல்லது 3 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.

    பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இணையம் வழியாக செலுத்தலாம்

    விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான வசதியை பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி 30-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
    • அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண்.044-45674567-ல் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மி.மீ விட்டமுள்ள உந்து பிரதான குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி மற்றும் இணைப்புப் பணி 30-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதனால் கீழ்ப்பாக்கம் பகுதிக்குட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பூங்காக்கள், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, கெல்லீஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண்.044-45674567-ல் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

    இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.



    வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர். அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

    ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.

    சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.

    வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×