search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Temple"

    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.
    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ‘நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

    மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

    மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.

    ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக் கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.

    நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பு.

    மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். 16--ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை : 7.30 மணி முதல் 12 மணி வரை
    மாலை: 4.30 மணி முதல் 8 மணி வரை
    (பிற விஷேச காலங்களில் நேர மாற்றம் உண்டு)

    இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.

    சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6--ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
    தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன.

    இங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
    வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
    வேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

    இதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

    அதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

    எளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.

    இங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.

    மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

    சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.

    குழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.

    ‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு?’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கையுடன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.

    இப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.

    இது தவிர, பகைவர்கள் தொல்லை விலகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.

    ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள்.
    உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமாக உணவு தேவை. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் உண்ணுவதற்கு உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள் என்கிறது.

    புராணங்கள் அனைத்திலும், தானங்களில் மிக உயர்ந்த தானமாக அன்னதானமே சொல்லப்பட்டு இருக்கிறது. ஒருவரது சகல தோஷங்களையும், முன் ஜென்ம வினை களையும் அடியோடு நீக்கவல்லது, ஒருவர் உள்ளன்போடு செய்யும் அன்னதானம் மட்டுமே. நாயன்மார்களில் பலரும், அடியவர்களுக்கு அன்னதானம் செய்வித்தே சிவபெருமானின் அருளாசியைப் பெற்றுள்ளனர்.

    மயிலாப்பூர் பூம்பாவை திருமுறைப் பதிகத்தில் ‘கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் அன்னதானம் காணாமல் சென்று விட்டாயே பூம்பாவை’ என்று கூறி இறந்து சாம்பலாகிப் போன பூம்பாவையை உயிருடன் எழுப்பி தருவார், திருஞான சம்பந்தர். இதன் மூலம் சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே மயிலாப்பூர் திருத்தலத்தில் அன்ன தானம் செய்வித்தல் என்பது சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளது என்பதனையும் அறியலாம். எனவே கபாலீஸ்வரர் திருக்கோவிலில் அடியவர்களுக்கு அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு என்கிறார்கள்.

    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள். இத்தலத்தில் கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்து கபாலீஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைந்துள்ளது.

    வீட்டில் சமைக்கும் பொழுது, தினமும் சிறு பிடி அரிசியை தனி பாத்திரத்தில் சேமித்து வரவேண்டும். பின்பு சேமித்த அந்த அரிசியை சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்பொழுது அங்குள்ள ‘பிடி அரிசி உண்டியலில்’ சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுவதால், பிடி அரிசி உண்டியலில் கொட்டிய அரிசி அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடுமையான கர்மவினைகளும், தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.

    கபாலீஸ்வரம் வர இயலாதவர்கள் இத்தல சம்பந்தர் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து, வீட்டினில் தினமும் சமைக்கும்போது ஒருகைப்பிடி அரிசியினை தனியாக எடுத்துவைத்து தங்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்திட அளிப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும். தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தை வலம் வரலாம் வாருங்கள்.

    ஒருமுறை கயிலாய மலையில் பார்வதி தேவிக்கு பஞ்சாட்சர மந்திரப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆனால் பார்வதி அதனைக் கவனிக்காமல் அருகில் இருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் அடைந்தாள். தன் தவறுக்கு வருந்திய பார்வதி தேவி, ஈசனை வேண்டி சாப விமோசனம் கூறும்படி கேட்டாள்.

    ஈசன் கூறியபடி, மயில் வடிவிலேயே பூலோகத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் சிவபூஜை செய்துவந்தார். புன்னை மரத்தின் அடியில் ஈசனை பூஜித்து, ஈசனுடன் மீண்டும் ஒன்றானாள். கபாலீஸ்வரர் கோவில் தல மரமான புன்னைமரத்தின் அடியில், மயில் வடிவில் அன்னை பார்வதி பூஜிக்கும் சிவலிங்கம் உள்ளது. உமையவள் ஈசனை மயில் வடிவில் பூஜித்ததால், இத்தலம் ‘மயிலாபுரி, மயிலை, மயிலார்ப்பு’ என்றழைக்கப்பட்டு, தற்போது ‘மயிலாப்பூர்’ என்று வழங்கப்படுகிறது.

    சிவபெருமானைப்போலவே, தொடக்க காலத்தில் ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார் பிரம்மன். தனக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் உள்ளதால், தானும் ஈசனுக்கு நிகரே என்ற எண்ணம் பிரம்மனுக்குத் தோன்றியது. பிரம்மனின் கர்வத்தை ஒடுக்க நினைத்த ஈசன், பைரவரை தோற்றுவித்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அப்படி தலையை இழந்து படைக்கும் தொழிலையும் விட்ட பிரம்ம தேவன், ரிஷிகளின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினான். பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாக திருக்காட்சி கொடுத்த ஈசன், பிரம்மனின் பிழையைப் பொறுத்து ஆக்கல் தொழிலையும் மீண்டும் அவருக்கு வழங்கினார். ‘கபாலி’ என்றால் ஈசனின் பைரவ வடிவமே. பைரவரை வழிபடுபவர்களுக்கு அக்காலத்தில் ‘கபாலிகர்கள்’ என்றே பெயர். இத்தல ஈசன், பைரவ சொரூபமே. கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட, அனைத்து செல்வங்களும் நம்மை வந்தடையும்.

    இத்தல கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் முதலிய பதினெண் கணங்களும் வழிபடுகின்றனவாம். இதனை சம்பந்தர் தனது இத்தல பூம்பாவை திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தலம் பைரவர் உபாசகர்கள் வழிபட வேண்டிய முதன்மை திருத்தலம் ஆகும். கபாலீஸ்வரர் கருவறை முன் மண்டபத்தில் ஈசனின் வலப்புறம் லிங்க சக்தி அருள்கிறாள். ஆலய வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் வள்ளி- தெய் வானையுடனான முருகப்பெருமான், சிங்காரவேலர் எனும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் நேர்எதிரில் அருணகிரிநாதர் சன்னிதி உள்ளது. கபாலீஸ்வரர் ஆலயக் கொடிமரத்தின் அருகில் தனிச்சன்னிதியில் திருஞானசம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளி உள்ளனர். சம்பந்தர் கையில் பொற்றாளத்துடனும், அவரை வணங்கிய நிலையில் பூம்பாவையும் இருக்கிறார்கள்.

    இத்தல அன்னையான கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்கலாம். தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் மயிலை கற்பகாம்பாளை, தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்க பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 8 வாரங்கள் வழிபட்டு, கருவறை தீபத்தில் சந்தனாதி தைல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வழிபட்டு வர வீடு வாங்கும் யோகம் கிட்டும் என்கிறார்கள்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

    ×