search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai salem green express way"

    பசுமை சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து ஆட்சேபனை தெரிவித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #chennaisalemgreenexpressway

    செய்யாறு:

    சென்னை-சேலம் பசுமை சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் விவசாய நிலங்கள் உள்பட சுமார் 700 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 639 விவசாயிகள் பசுமை சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆட்சேபம் தெரிவித்திருந்த மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் கூட்டத்தை நேற்று நடத்தினர்.

    இதில், செய்யாறு தாலுகாவில் ஆட்சேபனை தெரிவித்த 74 பேரில் 58 பேர் கலந்து கொண்டு எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை விட்டு கொடுக்க மாட்டோம் என்றனர்.

    இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்காக, செய்யாறு தாலுகா அலுவலகத்தில் 3 கட்ட போலீஸ் சோதனைக்கு பிறகே ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் டி.எஸ்.பி.க்கள் குணசேகரன், செந்தில் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டத்திற்கு வந்த எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்ற விவசாயி மற்றும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தை சேர்ந்த அத்தியபாடி அருள், முத்துக்குமார், முறையாறு சிவா ஆகிய 4 பேரும் திடீரென கைது செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை போட்டோ எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய முயன்றதால் 4 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், எதிர்ப்பு கருத்துகளை பதிவுசெய்த 58 விவசாயிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaisalemgreenexpressway

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து கைது செய்தனர் என்று மன்சூர் அலிகார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். #mansooralikhan #chennaisalemgreenexpressway

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரையாவது வெட்டுவேன் என கூறினார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் மன்சூர் அலிகானை சென்னையில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் சேலத்திற்கு அழைத்து வரப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்து மன்சூர் அலிகான் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசல் முன்பு அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    அப்போது மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்காக சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சினிமாவில் நடித்தபோது அட்டைக் கத்தியை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இங்கு சிறையில் 70, 80 வயதுடையவர்கள் எல்லாம் ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்டேன் என்றெல்லாம் வந்திருக்கிறார்கள்.

    தற்போது 40 சதவீத கமி‌ஷனுக்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்கிறார்கள். 8 வழிச்சாலையால் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறேன் என்றோ அல்லது எத்தகைய பசுமை புரட்சியை ஏற்படுத்த போகிறோம் என்றோ எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும்போதும் 4-வது சாலை எதற்காக அமைக்கிறார்கள்?. நான் கைது செய்யப்பட்ட அன்று, காலையில் ரத்ததானம் செய்யலாம் என புறப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து என்னை கைது செய்தார்கள். வைரமுத்து தலையை வெட்டி கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்களை எல்லாம் கைது செய்யவில்லை. மன்சூர் அலிகான் இளிச்சவாயன் என்பதால் கைது செய்து விட்டார்கள்.

    நடிப்பை தவிர எனக்கு வேறு வழியில்லை. அது மட்டுமே வருமானம். மாணவி வளர்மதி மிகப்பெரிய சக்தி எனக்கருதி அவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த ஜனநாயக நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமை இல்லாமல் போகிறது. நியாயத்தை பேசினால் வாய்ப்பூட்டு போட்டு கைது செய்கிறார்கள். பச்சை பச்சையாக பேசுபவர்களை எல்லாம் கைது செய்யாமல் சுதந்திரமாக சுற்ற விட்டிருக்கிறார்கள்.

    8 வழிச்சாலை அமைத்தால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என கூறினால் நாம் தமிழர் கட்சி சார்பில் கல், மண் சுமந்து சாலை அமைக்க உதவுகிறோம். அடக்கு முறையால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

    பின்னர் அவர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். #mansooralikhan #chennaisalemgreenexpressway

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை பணிக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.
    சேலம்:

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு நிலம் வழங்கிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இன்று வழங்கினார். அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் உறுதியளித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலை அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பாதிப்பில்லாமல் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தில் மரங்கள், வீடுகள், மாட்டுக் கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 186 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 46 ஹெக்டேர் அரசு நிலமாகும். இதுவரை 18 கிலோ மீட்டர் தூரம் நில அளவீடு பணி நிறைவு பெற்றுள்ளது.

    இந்த பணி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், மொத்தம் 853 நிலப்பட்டாதாரர்கள் உள்ளனர். ஒருசிலர் அதிக இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி வரை இழப்பீடு வழங்க வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நிலம் வழங்கியவர்களுக்கு, அதிக இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அடிப்படை சந்தை மதிப்பில் நகர்ப்புறங்களில், குறைந்தபட்சம் 2 மடங்கும், அதிகபட்சம் 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு தென்னை மரத்திற்கு 50,000 இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ChennaiSalemGreenExpressWay #FarmersProtest
    சேலம்:

    சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது.

    சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.



    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போராட்டத்திற்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து நில அளவீடு பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பகுதியில் 8 வழிச்சாலைக்காக கடந்த ஒரு வாரமாக நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கொக்கராப்பட்டியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    எருமியாம்பட்டியைச் சேர்ந்த காந்தி மனைவி கனிமொழிக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான 11.4 ஏக்கர் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, பாசன கிணறு ஆகியவையும் கையகப்படுத்த உள்ளது.

    இதனை அறிந்த கனிமொழி, ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலம் அளவீடு செய்தவர்களிடம் வந்து நிலத்தை கையகப்படுத்த வேண்டாம், என கண்ணீர் மல்க கூறினார்கள்.

    பாப்பம்பாடி பகுதியில் நிலத்தை அளவீடு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 42) என்பவரின் வீட்டின் நடுவே சாலை அமைய இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.



    புதிதாக கட்டிய வீடும் பாதிக்கப்பட இருப்பதால் அவர் வேதனை அடைந்தார். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து குமரேசன், அவருடைய மனைவி வேடியம்மாள் (34), மகன் சுஜித் (20) ஆகிய 3 பேரும் தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதைப்பார்த்ததும் அருகில் நின்ற ஏட்டு சிவகுமார் மற்றும் பலர் விரைந்து சென்று மண்எண்ணெய் கேனை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனாலும் நிலம் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. எருமியாம்பட்டி பகுதியில் இருந்து தருமபுரி-சேலம் எல்லையான மஞ்சவாடி கணவாய் வரை நிலங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இன்று 9-வது நாளாக பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய வந்தனர். அப்போது அதே கிராமத்தில் உள்ள 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தங்களது உடலில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டினார்கள்.

    அவர்கள் கையில் உள்ள தண்ணீர் கேனில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய்யும் இருந்தது. எங்கள் நிலங்களை அளவீடு செய்தால் தீக்குளிப்போம் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் அந்த கிராமத்தில் நில அளவிடும் பணியை கைவிட்டுவிட்டு ஏ.பள்ளிப்பட்டி கிராமத்துக்கு சென்று நில அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில், 122 கிமீ தூரத்துக்கு சாலை அமைகிறது. இதற்காக 74 கிராமங்களில் 7237 குடும்பத்தினரின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அங்கு வந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட 21 பேரை போலீசார் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறி கைது செய்தனர்.

    இதனால் கூட்டம் நடந்த இடத்தை மாற்றி வேங்கிக்காலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலங்களையும், வீடுகளையும் இழந்து, வீதிக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, தங்களுடைய எதிர்ப்பை மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வீடுகள், நிலங்களில் வரும் 26-ந் தேதி கருப்பு கொடியேற்றப்படும்.

    ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட தலைநகரங்களிலும் பசுமை வழிச்சாலை அமைக்கும் அரசாணையை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைதான 21 விவசாயிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களிடம் எஸ்.பி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து 21 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதுவரை சேலம், தர்மபுரியில் மட்டுமே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் பரவியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி விஜூ கிருஷ்ணன் கலந்து கொண்டார். இவர் கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பேரணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

    எனவே, இவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் விவசாயிகளை ஒன்றிணைத்து விடக் கூடாது என்பதை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் 5 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். #ChennaiSalemGreenExpressWay #FarmersProtest

    ×