search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai commissioner"

    • சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • சென்னை மாநகரில் 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துப்பு துலக்கப்படாத கொலை வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும், பழைய குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதற்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வரிசையில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருக்கும் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு போலீஸ் துப்பறியும் படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதில் இடம் பெற்றுள்ள போலீசார் மிகவும் நுட்பமாக துப்பறியும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக தகவல்களை திரட்டுவதில் கைதேர்ந்த காவலர்களும் இந்த சிறப்பு படையில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் துப்பு துலக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சுமார் 30 கொலை வழக்குகளை தூசு தட்ட தொடங்கி உள்ளனர். கொலை சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் ஆதாரங்களை நவீனப் படுத்தி அதன் மூலமாக அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விடவும் இந்த சிறப்பு தனிப்படை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரில் நடந்த துப்பு துலங்காத பழைய கொலை வழக்குகளுக்கு உயிர் கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    அதே நேரத்தில் பழைய வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படாமல் இருந்தால் முடிந்து போன வழக்குகளுக்கு மிகவும் உயிரூட்டுவது என்பது சிக்கலாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்துள்ள பேட்டியில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையை இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த படையில் பணிபுரிய திறமையான இளம் காவலர்கள் ஆர்வமுடன் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை கொலை வழக்குகளின் நிலை என்ன என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார்.

    இதுபோன்று சென்னை மாநகர காவல் துறையில் துப்பு துலங்காமல் இருக்கும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது. விடை தெரியாத கேள்வியை போல மர்மமாகவே மாறிப்போன அந்த கொலைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

    2004 ஜூன் 21: கே.கே.நகரில் பரிமளம் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக இருந்த பரிமளம் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் கொலையாளிகள் திருடிச் சென்றனர். இந்த கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது.

    2007-நவ.17: வேளச்சேரி சங்கர் அவென்யூ இந்திரா தெருவில் வசித்து வந்த வேக்கப் மேரி-வேக்கப் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் 2011: கோடம்பாக்கம் பாரதீஸ்வர காலனி பகுதியில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சுமார் 12 ஆண்டுகளாகியும் எந்தவித துப்பும் கிடைக்காமலேயே உள்ளது.

    அக்டோபர் 2011: மூதாட்டி பரமேஸ்வரி கொலை சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே ஆதிலட்சுமி என்கிற துணை நடிகை ஒருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் கிணற்றில் போட்ட கல்லாகவே மாறிப்போனது. கோடம்பாக்கம் பகுதியையே கலங்கடித்த இந்த 2 கொலை சம்பவங்களிலும் துப்பு துலக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    நவம்பர்-2011: கே.கே.நகர் நெசப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ரஞ்சிதா என்கிற பெண் கொலை செய்யப்பட்டார். கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்ட இந்த சம்பவத்திலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    ஏப்ரல் 2013: பெரம்பூரில் சுமதி என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் துப்பு எதுவும் கிடைக்காமல் முடக்கப்பட்டிருந்தது. இப்படி மேற்கண்ட 6 பெண்களை கொன்றவர்களும் யார்-யார்? என்பது பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் போலீசாரும் அது தொடர்பான பதிவேடுகளை மூலையில் தூக்கி போட்டிருந்தனர். இந்த பதிவேடுகள் அனைத்தும் தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ஐ.டி. ஊழியர் லாவண்யா இன்று சென்னை கமிஷனரை சந்தித்து பேசினார்.
    சென்னை:

    சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் லாவண்யா (வயது30). இவரது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா ஆகும்.

    சென்னை பள்ளிக்கரணையில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இரவு லாவண்யா பணிமுடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம்-தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது அவரை பின்தொடர்ந்த 3 பேர் அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார்கள். இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    பின்னர் அவர்கள் லாவண்யா அணிந்திருந்த நகை, பணம், லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஸ்கூட்டரை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கிடந்த அவரது ஸ்கூட்டரை மீட்டனர்.

    இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த நாராயண மூர்த்தி, விநாயக மூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆஸ்பத்திரிக்கு சென்று லாவண்யாவை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியமூட்டினார். போலீசாரும் அவருக்கு தைரியம் கொடுத்தனர்.

    3 மாத சிகிச்சைக்கு பிறகு லாவண்யா பூரண குணம் அடைந்தார். அவர் இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து நன்றி தெரிவித்தார். சம்பவத்தின்போது தனது உயிரை காப்பாற்றிய போலீசாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    அப்போது அவருடன் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து நான் மீண்டுவர எனக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் ஊக்கம் கொடுத்தனர். சம்பவம் நடந்த 10 நாட்கள் நான் எனது முகத்தை கூட கண்ணாடியில் பார்க்கவில்லை. போலீஸ் கமி‌ஷனர் என்னை சந்தித்து ஆறுதல் கூறி மன தைரியம் அளிக்கும் வி‌ஷயங்களை சொன்னார். என்னை யாரும் ஒதுக்கவில்லை. எல்லோரும் அளித்த ஊக்கம் தான் என்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது. எல்லோருமே எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்கள். தமிழக மக்களும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் சிவகுமாரை அண்ணன் என்று குறிப்பிட்ட லாவண்யா தான் குணமடையும் வரை அருகில் இருந்து அவர் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்த லாவண்யாவுக்கு முகத்தில் காயம் அடைந்த தழும்புகள் இருந்தன.
    ×