search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.டி. ஊழியர் லாவண்யா சென்னை கமி‌ஷனருடன் சந்திப்பு
    X

    ஐ.டி. ஊழியர் லாவண்யா சென்னை கமி‌ஷனருடன் சந்திப்பு

    கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ஐ.டி. ஊழியர் லாவண்யா இன்று சென்னை கமிஷனரை சந்தித்து பேசினார்.
    சென்னை:

    சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் லாவண்யா (வயது30). இவரது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா ஆகும்.

    சென்னை பள்ளிக்கரணையில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இரவு லாவண்யா பணிமுடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம்-தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது அவரை பின்தொடர்ந்த 3 பேர் அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கினார்கள். இதில் அவர் நிலைதடுமாறி விழுந்தார்.

    பின்னர் அவர்கள் லாவண்யா அணிந்திருந்த நகை, பணம், லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஸ்கூட்டரை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கிடந்த அவரது ஸ்கூட்டரை மீட்டனர்.

    இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த நாராயண மூர்த்தி, விநாயக மூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆஸ்பத்திரிக்கு சென்று லாவண்யாவை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியமூட்டினார். போலீசாரும் அவருக்கு தைரியம் கொடுத்தனர்.

    3 மாத சிகிச்சைக்கு பிறகு லாவண்யா பூரண குணம் அடைந்தார். அவர் இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து நன்றி தெரிவித்தார். சம்பவத்தின்போது தனது உயிரை காப்பாற்றிய போலீசாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    அப்போது அவருடன் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து நான் மீண்டுவர எனக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் ஊக்கம் கொடுத்தனர். சம்பவம் நடந்த 10 நாட்கள் நான் எனது முகத்தை கூட கண்ணாடியில் பார்க்கவில்லை. போலீஸ் கமி‌ஷனர் என்னை சந்தித்து ஆறுதல் கூறி மன தைரியம் அளிக்கும் வி‌ஷயங்களை சொன்னார். என்னை யாரும் ஒதுக்கவில்லை. எல்லோரும் அளித்த ஊக்கம் தான் என்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது. எல்லோருமே எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார்கள். தமிழக மக்களும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் சிவகுமாரை அண்ணன் என்று குறிப்பிட்ட லாவண்யா தான் குணமடையும் வரை அருகில் இருந்து அவர் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்த லாவண்யாவுக்கு முகத்தில் காயம் அடைந்த தழும்புகள் இருந்தன.
    Next Story
    ×