search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery delta"

    • அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.

    திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்த அவருக்கு அ.தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தஞ்சை வல்லம் பிரிவு சாலையில் 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நான் முதல் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு வந்துள்ளேன். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது போல், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி முகத்தை இந்த கூட்டத்தை பார்த்தே நிர்ணயித்து விடலாம். அடுத்த தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும்.

    இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை நீருபித்துக்காட்டுகிறது.

    இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள். அத்தனையும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலமாக நல்ல தீர்வை கண்டோம். அ.தி.மு.க.,வை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த இயக்கம், ஜெயலிலதா கட்டி காத்த இயக்கம்.

    நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, வலிமையான கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. இதில் யார் உழைக்கின்றார்களோ உச்சபட்ச நிலையை அடைவார்கள். நீங்களும் வரலாம். இது அ.தி.மு.க.,வில் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. இந்தியாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.

    எவ்வளவு கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு எட்டு மாதங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நுாறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டு இருக்கிறார்.

    மக்களுக்கு எல்லாம் இது நன்றாகவே தெரியும். விஞ்ஞான உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது.

    தி.மு.க.,வை பொறுத்தவரை அது குடும்பகட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் குறிக்கோள். மக்களை பற்றி கவலை கிடையாது.

    அ.தி.மு.க., மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆனால் தி.மு.க.,வில் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரணமாக 12 ஆயிரம் ரூபாய் தான் வழங்கினார்கள். ஆனால் அ.தி.மு.க., 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.

    தற்போது சம்பா, தாளடிக்கு தண்ணீர் இல்லை. ஆனால் மத்திய அரசிடமும் ,கர்நாடக அரசிடமும் போராடி நமது பங்கு நீரை பெற்று தரவில்லை. இருப்பினும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கனமழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வேளாண்மையை பாதுகாத்தோம்.

    விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்தோம்.

    காவிரி பிரச்சனைக்காக சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மூலமாக நமக்கு வரவேண்டிய காவிரி நீரை பெற்றோம். ஆனால் தி.மு.க., விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. துார்வாரும் திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள்.

    அ.தி.முக. ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பயிர் காப்பீடு ரூ.9300 கோடி பெற்று தந்தோம். வறட்சி நிவாரணம் கொடுத்தோம். மும்முனை மின்சார திட்டம் அமல்படுத்தினோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தல் தான் 2026 தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மாட்டுவண்டியை தானே ஓட்டியபடி விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்றார் தொடர்ந்து அங்கு சிறப்புரையாற்றினார். இதையடுத்து அவர் அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து தங்கினார்.

    பின்னர் இன்று காலை 9 மணியளவில் திருச்சியில் இருந்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட எல்லையான செங்கிப்பட்டி பகுதியில் திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வல்லம் பிரிவு சாலைக்கு சென்றார். அங்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு முடிந்த பின்னர் அங்குள்ள 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க கொடியேற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-


    தமிழ்நாட்டிற்கு குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் எண்ணற்ற பலவளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தியது அ.தி.மு.க. அரசு தான். காவரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வேளாண்மையை பாதுகாத்தோம். நாம் ஆட்சியில் இருந்த வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நீர்வள மேம்பாடு சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஒரத்தநாடு சென்ற அவருக்கு ஒரத்தநாடு தொகுதி சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் தாரை தப்பட்டத்துடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்புக்கு பின்னர் பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார். பட்டுக்கோட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாவட்ட செயலாளருமான சி.வி.சேகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மதுக்கூர் துரை செந்திலின் அண்ணன் ஆதிமுத்து வள்ளாள தேவர் உருவப் படத்தினை திறந்து வைத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநல்லூரியில் தமிழ்நாடு பாடநூல் வாரிய முன்னாள் தலைவர் தங்கமுத்து, விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரின் தாயார் மறைந்த சொர்ணத்தம்மாள் படத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    பின்னர் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதையடுத்து மாலையில் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து மாலை 6 அளவில் திருச்சிக்கு காரில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை மாவட்ட வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பிளக்ஸ் பேனர், கொடி கம்பங்கள், ஆர்ச்சுகள், பிரமாண்ட கட் அவுட்கள், தோரணைகள் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி வருகையால் தஞ்சை மாவட்டம் விழாக்கோலம் பூண்டது.

    • கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயி கள் சங்கம் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலா ளர் குடவாசல் சரவணன், மாநில துணை செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்.

    இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.

    • ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும்.
    • காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    ஆடி மாதம் புனிதமான மாதம். தெய்வீக உணர்வை அதிகரிக்க செய்யும் மாதம். அதனால் தான் மற்ற எந்த மாதத்தையும் விட இந்த மாதத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளன.

    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி சுவாதி, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று மாதம் முழுவதும் மங்களகரமாக இருக்கும்.

    இந்த பண்டிகை நாட்களில் `ஆடிப்பெருக்கு' எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு மகத்துவமும், தனித்துவமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக ஆடி 18-ந் தேதியன்று இந்த விழா நடைபெறும்.

    சங்க கால தமிழர்கள் ஆடிபெருக்கு தினத்தை, மற்ற எந்த விழாக்களையும் விட மிக, மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் காவிரி நதியை நம் முன்னோர்கள் தெய்வமாக, தாயாக கருதியது தான்.

    சங்க காலத்தில் ஆடி பெருக்கு தினத்தன்று காவிரி நதியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். பொதுவாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள்.

    அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு வெள்ளம் ஓடும். அந்த புது வெள்ளத்தை வணங்கி, வரவேற்க தமிழர்கள் `ஆடி பதினெட்டு' விழாவை கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன.

    ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும். இது மலைப்பகுதிகளில் பலத்த மழையை பெய்யச்செய்து காவிரியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும். உடனே காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இந்த சமயத்தில் நெல், கரும்பு பயிரிட்டால் தான், தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு நம் முன்னோர்கள் செயல்பட்டார்கள்.

    அதன் தொடக்கமாகத்தான் ஆடிப்பெருக்கை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். சங்க காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?

    ஆடி 18-ந் தேதி காலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் குளித்து, புத்தாடை அணிந்து அலை, அலையாக நதி கரைக்கு வந்த விடுவார்கள். முதலில் காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

    காவிரி கரையோரம் வாழை இலை விரித்து அதில் புது மஞ்சள், புது மஞ்சள் கயிறு, குங்குமம், புத்தாடை மற்றும் மங்கல பொருட்கள் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை காவிரித்தாயை கங்கா தேவியாக நினைத்து, ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

    பிறகு சுமங்கலி பூஜை நடத்துவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் தம் குடும்பத்து சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை எடுத்துக் கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    பிறகு திருமணம் ஆகாத பெண்களும், காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.

    சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி, காவிரி டெல்டாவின் கடை மடை பகுதி வரை இந்த கொண்டாட்டம் அந்தந்த பகுதி மண்வாசனைக்கு ஏற்ப இருக்கும். காவிரி கரையோரங்களில் மட்டுமின்றி வைகை, தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஒரு காலத்தில் கோலாகலமாக நடந்தது.

    நதிக்கு பூஜை செய்து முடித்ததும், கரையோரங்களில் அமர்ந்து புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், வடை மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் இந்த கொண்டாட்டம் இருக்கும்.

    ஆனால் இன்று ஆடி பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் சில இடங்களில் மட்டும், ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. சாதாரண விழா போல மாறிவிட்டது. காவிரியை நாம் வெறும் நதியாக பார்ப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நம் முன்னோர்கள் காவிரியை தெய்வமாக, தாயாக கருதினார்கள். காவிரியை ஈசன் மனைவி பார்வதியாக கருதினார்கள். காவிரித் தாய்க்கு மசக்கை ஏற்பட்டதாக நினைத்தனர்.

    பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன் சபதம் நிறைவேறியதும் காவிரியில் புனித நீராட வந்ததால், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதாக நம்பினார்கள். அது மட்டுமல்ல, ராமபிரான் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக நம்பினார்கள்.

    காவிரி நதியில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக சங்க கால தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் காவிரியை கடவுளாக பார்த்தனர்.

    காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது, கடவுள் உற்சாக பெருக்குடன் வந்து தங்களை வாழ்த்துவதாக கருதினார்கள். அந்த சமயத்தில் காவிரி கரையோரம் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

    அன்றைய தினம் எந்த புதிய முயற்சியைத் தொடங்கினாலும், அது ஆடி பெருக்கு போல பெருக்கெடுக்கும் என்று கருதினார்கள்.

    * புதிய தொழில் தொடங்கலாம்.

    * புதிய வாகனம் வாங்கலாம்.

    * சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    * காய்கறி தோட்டம் போடலாம்.

    * நகை வாங்கலாம்.

    * புதிய பொருட்கள் வாங்கலாம்.

    இப்படி ஆடிப்பெருக்கு தினத்தன்று நீங்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும். அன்றைய தினம் காலை காவிரியில் நீராடுவது, எல்லா தோஷங்களையும் நீங்கச் செய்யும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரங்கநாத பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்வார். இதை கண்டால் `கோடி புண்ணியம் கிடைக்கும்' என்பது ஐதீகமாகும்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும்.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை போதுமான அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 216 கன அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சிறிது அளவு அதிகரித்து 4,107 கன அடியாக வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் ஒரு நாளைக்கு ½ அடி வீதம் சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 56.85 அடியாக உள்ளது.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    நீர்வரத்து சரிந்த நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    பாசன வசதிக்கு மட்டுமின்றி 155 குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக இருந்து 22 மாவட்ட மக்களின் தாகத்தையும் மேட்டூர் அணை தீர்த்து வருகிறது.

    ஆண்டுதோறும் பாசன விதிகளின்படி ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு குறுவை சாகுபடி, தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 56 நாட்களில் 46 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடி நிறைவடைய வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை பாசனத்திற்கு சுமார் 79 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஆனால் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 56.85 அடியாக உள்ளது. நீர் இருப்பு 22.30 டி.எம்.சியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கும் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும் 9.60 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். மீதமுள்ள தண்ணீரை கொண்டு 2 வாரங்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். அதன் பிறகு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கவலையும் டெல்டா விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்படாததால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் தண்ணீர் இன்றி பயிர் சாகுபடி செய்யப்படாமல் காய்ந்து வருகிறது.

    கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். அல்லது பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.
    • மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 முதல் 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 4 கி.மீ. வரை மட்டுமே தூர்வார வேண்டி உள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீதப் பணிகள் முடிவடைந்து விடும்.

    இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரிலும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 976 ஏக்கரிலும் என மொத்தம் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்நோக்கு மழை, கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
    • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

    நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
    • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

    நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    • பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்பட 15 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220 நாள்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் திறக்கப்படும்.

    மேட்டூர் அணையில் 90 ஆண்டுகால வரலாற்றில் முதன் முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் 12-ல் 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக 11 ஆண்டுகள் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிற ஆண்டுகள் தாமதமாகவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது 90-வது ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் 12-ல் மேட்டூர் அணை நீர்மட்டம் 107.2 அடியாகவும் நீர் இருப்பு 74 டிஎம்சியாகவும் இருந்தது. நீர்வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதேபோல் தற்போதும் நீர் இருப்பு திருப்பதிகரமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும், நீர் இருப்பு 69.98 டி.எம்.சி.யாகவும், நீர் வரத்து 3088 கன அடியாகவும் உள்ளது.

    தற்போது டெல்டா பாசனக்கால்வாய் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தொடங்கிய தூர்வாரும் பணி நிறைவடைந்தால் மட்டுமே டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது. தவறினால் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    கடந்த ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் 26 டிஎம்சி தண்ணீரும், கபினியில் 8.4 டிஎம்சி தண்ணீரும் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 13 டி.எம்.சி.யும், கபினியில் 4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே, நீர்வரத்து, நீர் இருப்பு பருவ மழையைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒருவார காலத்தில் தண்ணீர் திறக்கும் தேதியை நீர் வளத்துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். 

    காவிரி டெல்டாவை பாதுகாக்க ஜூன் 12-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்புகள் வருகிற 12-ந் தேதி திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. இந்த போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்பூர்வமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கும். உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் இல்லை என்றாலும், உங்கள் (பி.ஆர்.பாண்டியன்) அமைப்பின் சார்பில் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வது எனது கடமை.

    ஜூன் 12-ந் தேதி தாங்கள் (பி.ஆர்.பாண்டியன்) மேற்கொண்டுள்ள நிகழ்வில், வேறு பணிகள் காரணமாக என்னால் நேரில் பங்கேற்க இயலாது. எனினும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×