search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arts and Sciences"

    • அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
    • பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு இணையதள முகவரிகளில் கடந்த மாதம் ஜூன் 22-ம் தேதி தொடங்கியது.

    117 கல்லூரிகள்

    இதையடுத்து கடந்த 7-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து கவுன்சிலிங் முடிவடைந்து, மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுபோல் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு அட்மிஷன் தீவிரமாக நடைபெற்றது.

    சேலம்

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இதில் 2021-2022 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் ஏரியில் கட்டப்பட்ட புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2022-2023-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடை விடுமுறை

    இந்த நிைலயில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடந்து முடிந்தது.

    செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது.

    வகுப்புகள் தொடங்கின

    கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    ஆலோசனை

    மேலும் வகுப்பு பேராசியர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பிரச்சினையால் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்துமாறு பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 

    ×