search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arcot murder"

    வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காதல் மனைவி தனியாக கொன்று புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி சந்து தெருவை சேர்ந்தவர் ராஜா (28). எலக்ட்ரீசியன், இவரது மனைவி தீபிகா (20). இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மகன் பிரவீன் (1).

    இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தீபிகா புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.

    இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12-ந் தேதி இரவு கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகியோரை தலையில் கற்களை கொண்டு தாக்கினேன். பின்னர் தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.

    பின்னர் இருவரின் பிணத்தையும் வீட்டின் அருகே சிறிய அளவில் பள்ளம் தோண்டி புதைத்து, அதன்மேல் விறகுகளை அடுக்கி வைத்து மறைத்துவிட்டேன்.

    அவர்களை கொலை செய்யும்போது ஏற்பட்ட ரத்தக்கறைகளை துணிகளால் துடைத்து அவற்றை வீட்டின் அருகிலேயே தீவைத்து எரித்துவிட்டேன் என்று தீபிகா போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஆற்காடு தாசில்தார் வச்சலா மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தீபிகாவை கைது செய்தனர்.

    மேலும் இதில் தொடர்புடையதாக கருதி ராஜாவின் நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. தனியாக தீபிகா இதனை செய்ய முடியாது. மேலும் புதைக்கப்பட்ட பள்ளம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் தீபிகாவுக்கு யாரோ உடந்தையாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

    ஆனால் தான் மட்டுமே கணவர், குழந்தையை கொன்று புதைத்தேன். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தீபிகா அடித்து கூறி வருகிறார். எப்படி கொலை செய்தேன் என நடித்தும் காட்டியுள்ளார்.

    போலீசார் தொடர்ந்து தீபிகா மற்றும் ராஜாவின் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஆற்காடு அருகே கணவர் குழந்தைகளை கொன்று புதைத்த காதல் மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). எலக்ட்ரீசியன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா (20) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு வயது மகன் பிரனீஷ்.

    இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று கதறியபடி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்ய வந்துள்ளார்.

    அப்போது போலீசார், உங்கள் கணவரை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று சமாதானம் செய்தனர். மேலும் அவர், செல்போன் எண்ணைக் கொடுங்கள், அதை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம் என கேட்டுள்ளனர்.

    அதற்கு தீபிகா, எனது கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்து சென்றுவிட்டார் என்று கூறியதுடன், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தீபிகா, நான் எனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகியோரை கொன்று, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார்.

    தொடர்ந்து, நேற்றிரவு அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். இரவு 11 மணி ஆகிவிட்டதால், போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.

    இதனால் 2 பேரையும் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தை இன்று தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.

    புதைக்கப்பட்ட இடத்தை தாசில்தார் வத்சலா, டி.எஸ்.பி. கலைச்செல்வன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பானு ஆகியோர் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.


    இதையடுத்து தீபிகாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். அவர் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.

    அப்போது ராஜாவின் உறவினர்கள் ஆத்திரத்தில் தீபிகாவை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீபிகாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனை கண்டு ராஜாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.

    முதற் கட்ட விசாரணையில் தீபிகா அவரது கணவரை கல்லால் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    ராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×