search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIBA Women World Boxing"

    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.

    51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார். 
    பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. #WomenWorldBoxing #Championship
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    மேரிகோம் (48 கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா பூனியா ஆகியார் இடம் பிடித்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு உலக போட்டியில் மகுடம் சூடிய இத்தாலியின் அலிசியா மெசியானோ (பெதர் வெயிட் பிரிவு), 81 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவின் நடப்பு சாம்பியன் யாங் ஸியாலி (சீனா), வெள்ளிப்பதக்கம் வென்ற கைய் ஸ்கோட் (ஆஸ்திரேலியா), ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற மிரா போட்கோனென் (பின்லாந்து) மற்றும் முன்னணி நட்சத்திரங்களான பியாம்விலாய் லாபியாம் (தாய்லாந்து) அனஸ்டசியா பெலியக்கோவா(ரஷியா), விர்ஜினியா புச்ஸ் (அமெரிக்கா), லின் யு டிங் (சீனதைபே) உள்ளிட்டோரும் இந்த போட்டியில் வரிந்து கட்டுவதால் இந்திய வீராங்கனைகள் கடும் சவால் களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைந்தது 3 பதக்கங்கள் கிடைக்கும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எதிர்பார்க்கிறது.

    5 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் மீண்டும் சாதிக்க வாய்ப்புள்ளது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மேரிகோம், 6-வது முறையாக தங்கப்பதக்கத்தை அறுவடை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘எனது 48 கிலோ எடைப்பிரிவில் 2001-ம் ஆண்டில் இருந்து இன்னும் நிறைய வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள். அவர்களை பற்றி நான் நன்கு அறிவேன். அதே சமயம் இளம் வீராங்கனைகள் கடும் போட்டியாளராகவும், சாதுர்யமாகவும், வேகமாகவும் செயல்படுகிறார்கள். எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.

    இந்திய பயிற்சியாளர் ரபெல்லே பெர்கமாஸ்கோ கூறுகையில், ‘கால்பந்தில் மரடோனா எப்படியோ அதே போல் குத்துச்சண்டையில் மேரிகோம். அபாரமான திறமை கொண்டவர். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது நெருக்கடியாக இருக்கும். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று நம்புகிறேன்’ என்றார்.

    குத்துச்சண்டை திருவிழா தொடங்குவதற்கு முன்பே சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு வீராங்கனைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் முககவசம் அணிந்தபடி வெளியே வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்க போட்டி என்பதால் காற்று மாசு தாக்கத்தை ஏற்படுத்தாது.

    செர்பியா நாட்டில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு பிரிந்த கொசோவாவை இந்தியா தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கொசோவாவை சேர்ந்த வீராங்கனை டான்ஜிட்டா சாதிகு மற்றும் இரண்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசு இன்னும் ‘விசா’ வழங்கவில்லை. அதே நேரத்தில் கொசோவாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே ‘விசா’ பிரச்சினையை இந்தியா சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

    இந்த போட்டிக்கான தொடக்க விழா நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணிக்கு மேரிகோம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
    ×