search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abortion for women"

    திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பங்களா வீட்டில், கருக்கலைப்பு நடந்ததை, மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு நடத்திய திடீர் சோதனையில் கண்டுபிடித்தனர்.

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி (51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன் (52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட பங்களா வீடு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று இரவு ஆனந்தியின் பங்களா வீட்டில் வைக்கப்பட்ட சீல் உடைத்து, சோதனை நடத்தினர். 2,400 சதுர அடி பரப்பளவில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

    சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு அதிகபட்சமான தண்டனைகள் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு தொழிலில் ஆனந்தி ஈடுபட்டிருக்கிறார். சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ண்ட்மென்ட் பெற்றிருந்தனர்.


    மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கருக்கலைப்புக்காக இவரிடம் வந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 19 ஆயிரம் சிசுக்களை கருவில் கலைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    ஆனந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் பெயரில் உள்ள 9 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேறு ஏதேனும் வங்கிக்கணக்குகள், சொத்துக்கள் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம்.

    ஆனந்தி நடத்தி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இவரால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர், டி.எஸ்.பி. ஆகியோர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 834 ஆக குறைந்திருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே, கருவுற்ற 4 மாதங்களுக்கு பிறகு ஸ்கேன் எடுப்பவர்கள், 2 குழந்தைகளுக்கு பிறகு கருவுற்று ஸ்கேன் எடுத்தவர்களுக்கு பிரசவம் நடந்ததா என சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கிறோம்.

    ஸ்கேன் சென்டர்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.

    கருக்கலைப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக 3வது முறையாக ஆனந்தி கைது செய்யபட்டுள்ளார். இதனால் அவரை ஜாமீனில் வெளியில் வராதவாறு குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளார். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் அடுக்குமாடி வீட்டில், பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடூரம் நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் பிரிவின் மாநில கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே மருத்துவ கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கமலகண்ணன், நடராஜன், தாமஸ் பிரபாகர் உள்ளிட்டோர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.

    அவர்களை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனையடுத்து ஆனந்தியின் செல்போன் மூலம் துப்பு துலக்க முடிவு செய்தனர்.

    ஆனந்தியின் செல்போனை ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவிட்ச் ஆப் செய்தனர். மறுநாள் மாலையில் செல்போனை ஆன் செய்து பார்த்த போது கருக்கலைப்பு செய்வதற்காக 25 பேர் அழைத்தது தெரியவந்தது. அதில் 5 பெண்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

    கருக்கலைப்பு செய்வது குற்றம் இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என கூறினர். 5 பெண்களுக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.

    ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசிய எண்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கருக்கலைப்புக்காக ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில் சென்று கருக்கலைப்பு செய்யும் மொபைல் சர்வீஸ் நடத்தியதும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் வடிவிலான ஸ்கேன் கருவி.

    ஆனந்தி பயன்படுத்தும் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் கருவி, லேப்டாப் வடிவமைப்பில் உள்ளதால் அதனை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வது எளிதாக அமைந்திருக்கிறது. மேலும் ஆனந்திக்கு கருக்கலைப்புக்கான பெண்களை அனுப்பி வைக்கும் நெட்வொர்க் மாநில அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை வட மாவட்டங்களுக்கு கருக்கலைப்பு மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருக்கலைப்புக்காக பெண்களை இங்கு அழைத்து வரும் இடைத்தரகர்களின் பட்டியலை, மருத்துவ கண்காணிப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். இடைத்தரகர்கள் பலரும் விரைவில் சிக்குவர்கள் என தெரிகிறது.

    ஆனந்தியின் செல்போனுக்கு ஒரே நாளில் 25 கருக்கலைப்பு போன் கால் வந்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆனந்தி தம்பதியினர் 19 ஆயிரம் சிசு கருக்கலைப்பு செய்திருக்கக் கூடும்.

    கருக்கலைப்பு செய்ய வந்த ஒரு செல் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு லட்சம் சம்பளம் பெரும் ஆடிட்டர், ஏற்கெனவே 2 பெண் குழந்தை இருப்பதால், மூன்றாவதாக மனைவிக்கு பெண் சிசு கருவில் வளர்வது தெரிந்து கருக்கலைப்புக்கு முயன்றுள்ள கொடுமை தெரியவந்தது.

    படித்தவர்களே பெண் சிசுவை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது கொடுமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்களும், 920 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 850 பெண் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது.

    பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்க இந்திய அளவில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்ட மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநில கலெக்டர்கள் தான் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு மத்திய சுகாதார கண்காணிப்பு குழுவினரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் சோதனைகள் நடத்தினர். அப்போது 7 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.

    எம்.பி.பி.எஸ். முடித்த ஒரு பெண் டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அப்போது நடந்த சோதனையில் போலி பெண் டாக்டர் ஆனந்தி தப்பி விட்டார். தற்போது அவர் பிடிபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IllegalAbortionCenter
    திருவண்ணாமலையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தம்பதியரை போலீசார் கைது செய்தனர். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள்.

    இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கருவிலேயே ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது.

    ஆணா, பெண்ணா என கண்டு பிடித்து கருக்கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருத்துவமனைகளில் அறிவிப்பாக ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஸ்கேன் சென்டரில் பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடித்து பெண் கருவை கலைத்து வந்தது தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வேங்கிக்கால் என்ற இடத்தை சேர்ந்தவர் டாக்டர்ஆனந்தி. இவர் தனது வீட்டிலேயே ஸ்கேன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இங்கு கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும் பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஆனந்தியின் செயல்பாடுகளையும், பரிசோதனை மையத்தையும் சென்னையில் இருந்து சென்ற சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    இரவு நேரங்களில் மட்டுமே அவர் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்ததால் பொறி வைத்து கையும் களவுமாக பிடிக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஆனந்தி வீட்டுக்கு கருக்கலைப்பு செய்ய ரகசியமாக அனுப்பி வைத்தனர்.

    அதன்படி அந்த பெண் ஆனந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், நுன்கதிர் டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் அங்கு புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ரகசிய பாதாள அறையில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்றபோது ஆனந்தி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அதிகாரிகள் ரகசிய பாதாள அறையில் சோதனை செய்தனர்.

    அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்த பல்வேறு அறிக்கைகள் இருந்தன. மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.

    ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ் செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்திற்கும் சீல் வைத்தனர்.


    திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    சிவக்குமார் இங்கு வரும் பெண்களை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, திரும்ப அவர்களை அங்கு கொண்டு போய் விடுவது மற்றும் புரோக்கர்போல் செயல்பட்டு வந்தார்.

    கருக்கலைப்பு செய்யும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். முறைகேடாக கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கலைக்கவும், பெண் சிசு கருவை கலைக்கவும், அதிகமாக பணம் வசூல் செய்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் சிவக்குமார்.

    2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக இது போல் சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தி ஏற்கனவே இதுபோன்று குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.

    அவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக ஸ்கேனிங் மையம் நடத்தி வந்துள்ளார்.

    திருவண்ணாமலையில் இதுபோன்று புகார்கள் ஏற்கனவே நிறைய வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் சோதனை நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறிவந்த 3 ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர்.

    திருவண்ணாமலையில் இதுபோல் மேலும் பல சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றையும் கண்டு பிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #IllegalAbortionCenter
    ×